

சென்னை: தனியார் நிறுவனத்தின் நிலம் மற்றும் கட்டிடங்களைச் சாதகமாக மதிப்பீடு செய்து வழங்க ரூ. 9 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில், மத்திய பொதுப்பணித்துறையைச் சேர்ந்த இரண்டு உயர் அதிகாரிகள் மற்றும் லஞ்சம் கொடுத்த தொழில் அதிபர் ஆகிய மூவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் பாபுராவ் சின்ச்கரே, தற்போது சென்னையில் உள்ள மத்திய அரசின் பொதுப்பணித்துறையில் கண்காணிப்புப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடன் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுநாதன் என்பவர் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த 2022-23 காலகட்டத்தில், இவர்கள் இருவரும் சென்னை வருமான வரித்துறை மதிப்பீட்டுப் பிரிவில் முறையே மாவட்ட மதிப்பீட்டு அதிகாரி மற்றும் உதவி மதிப்பீட்டு அதிகாரியாகப் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே இயங்கி வரும் ஒரு தனியார் நிறுவனத்தின் சொத்துக்களை மதிப்பீடு செய்யும் பணி இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது, அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள அந்த நிறுவனத்தின் நிலம் மற்றும் கட்டிடங்களுக்குச் சாதகமான ஒரு மதிப்பீட்டு அறிக்கையைத் தயாரித்து வழங்க, சஞ்சய் பாபுராவ், மஞ்சுநாதன் ஆகிய இருவரும் அந்நிறுவனத்தின் பங்குதாரரான சுபாஷ் சந்தர் ராணாவிடம் ரூ. 9 லட்சம் லஞ்சம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இது குறித்து சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சிபிஐயின் முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி, கடந்த 2023, ஜனவரி 4-ம் தேதி சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் வைத்து, சஞ்சய் பாபுராவின் அறிவுறுத்தலின்படி மஞ்சுநாதன் அந்த ரூ.9 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டார் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அரசு அதிகாரிகள் சஞ்சய் பாபுராவ், மஞ்சுநாதன் மற்றும் லஞ்சம் கொடுத்த சுபாஷ் சந்தர் ராணா ஆகிய மூவர் மீதும் குற்றச் சதி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிபிஐ தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளது.