

மாதிரி படம்
ஆண்டிபட்டி: உரிய ஆவணம் இல்லாததால், மொய்ப் பணம் ரூ.13 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆண்டிபட்டி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, தேர்தல் பறக்கும் படையினர் கண்டமனூர் அருகே ராஜேந்திரா நகர் பகுதியில் வாகனச் சோதனையில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ரூ.12 லட்சம் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பணம் கொண்டுவந்த அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்த இளையராஜாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், கடமலைக்குண்டு அருகே அய்யனார் கோயிலில் வசந்த விழா நடத்தி, அதில் கிடைத்த மொய்ப்பணத்தை வீட்டுக்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்தார். ஆனால், அவரிடம் அதற்கான ஆவணம் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல், ஆண்டிபட்டி புறநகர் பகுதியில் பறக்கும் படையினர் சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது கேரள மாநிலம் குமுளியில் இருந்து உசிலம்பட்டி நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் குமுளியைச் சேர்ந்த திவான் மைதீன் ரூ.1 லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், ராஜபாளையத்தில் நடைபெற உள்ள நிச்சயதார்த்த விழாவில் மொய் செய்வதற்காக பணத்தை கொண்டுசெல்வதாகத் தெரிவித்தார். ஆனால், உரிய ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் அப்பணத்தை பறிமுதல் செய்தனர். இரண்டு இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பறக்கும் படையினர் ஆவணப்படுத்தி, சீலிட்டு ஆண்டிபட்டி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.