

சென்னை: நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தம் மற்றும் கால நீட்டிப்பு வழங்கியதில் ரூ.422 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் தனியார் ஒப்பந்த நிறுவனங்களுடனும், தனிநபர்களுடனும் கூட்டணி அமைத்து அதிகாரிகள் ரூ.422 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்தக் கோரியும் கடலூரைச் சேர்ந்த எச்.மணிகண்டன் என்பவர் சிபிஐக்கு கடந்த 2025 ஜூலையில் புகார் அனுப்பி வைத்தார்.
சென்னை: நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தம் மற்றும் கால நீட்டிப்பு வழங்கியதில் ரூ.422 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் தனியார் ஒப்பந்த நிறுவனங்களுடனும், தனிநபர்களுடனும் கூட்டணி அமைத்து அதிகாரிகள் ரூ.422 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்தக் கோரியும் கடலூரைச் சேர்ந்த எச்.மணிகண்டன் என்பவர் சிபிஐக்கு கடந்த 2025 ஜூலையில் புகார் அனுப்பி வைத்தார்.
அந்த புகார் மீது சிபிஐ நடவடிக்கை எடுக்காததால், என்எல்சி நிறுவனத்தில் நடந்துள்ள முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர்கூறியிருந்ததாவது: என்எல்சி சார்பில் ஒடிசாவில் உள்ள தலபிரா அனல் மின் திட்டத்துக்கு ஒப்பந்தங்களை வழங்கியது மற்றும் அதில் திருத்தம் செய்ததில், ஒப்பந்த நிபந்தனைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. நகர்ப்புற கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை நியமன அடிப்படையில் தன்னிச்சையாக வழங்கியதன் விளைவாக திட்டச் செலவு ரூ.524.50 கோடியாக அதிகரித்துள்ளது.
என்எல்சி நிறுவனத்தில் கிடைக்கும் சாம்பலுக்கு சந்தை மதிப்பு அதிகமாக உள்ளபோதிலும், போக்குவரத்து ஒப்பந்தங்களுக்கு டன்னுக்கு ஒரு ரூபாய் என்ற அடிப்படையில் ஒப்பந்தங்கள் முறைகேடாக கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சமூக நலத் திட்டங்களுக்காக செலவிடப்படும் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதியில் மிகப்பெரிய அளவுக்கு மோசடி நடந்துள்ளது.
இதேபோல, போலி அங்கீகாரக் கடிதம் வழங்கப்பட்டு வங்கிப் பரிவர்த்தனைகளிலும் முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 73 ஆயிரம் டன் அளவுக்கு செம்மண் சட்ட விரோதமாக வெட்டி எடுத்து கடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குற்றம்சாட்டிஇருந்தார். நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.ரவிக்குமார், ‘‘என்எல்சி நிறுவனத்தில் கடந்த 2022-25 காலகட்டத்தில் நடந்துள்ள இந்த மெகா மோசடிகள் குறித்து ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்தும் என்எல்சி உயர் அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என குற்றம்சாட்டினார்.
சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.சீனிவாசன், ‘‘மனுதாரர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதே தவிர, என்எல்சி அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை. சிபிஐ விசாரணைக்கு மனுதாரர் போதிய ஒத்துழைப்பும் வழங்கவில்லை’’ என்றார். இரு தரப்பு தங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல்குமார் பிறப்பித்துள்ள உத்தரவு: என்எல்சி நிறுவன உயர் அதிகாரிகள் ரூ.422 கோடி அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக மனுதாரர் தீவிரமான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
என்எல்சியில் முறைகேடு எதுவும் நடைபெறுகிறதா என்று, அங்கு உள்ள ஊழல் தடுப்பு பிரிவும் கண்காணித்து அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சூழலில், மனுதாரர் புகார் கொடுத்துள்ளார் என்ற ஒரே காரணத்துக்காக சிபிஐ நேரடியாக களமிறங்கி வழக்கு பதிவு செய்ய முடியாது. மனுதாரர் அளித்துள்ள புகார் தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணை நடத்தி, அந்த குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருந்தால் மட்டுமே வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆதாரங்களை வழங்க உத்தரவு: மனுதாரர் தன்னிடம் உள்ள ஆதாரங்களை முழுமையாக தாக்கல் செய்யவில்லை என சிபிஐதரப்பில் கூறப்படுகிறது. எனவே, பிப்.23-ம் தேதி சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும் வகையில் அவருக்கு சம்மன் பிறப்பிக்க வேண்டும். அப்போது மனுதாரர் விசாரணைக்கு ஆஜராகி, தன்னிடம் உள்ள ஆதாரங்களை சிபிஐவசம் தாக்கல் செய்ய வேண்டும். அவற்றின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் சட்ட ரீதியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி முடித்து வைத்துள்ளார்.