

சென்னை: 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை செங்கல்பட்டு நீதிமன்றத்திலிருந்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் நிறுவன ஊழியரின் 13 வயது மகளை பக்கத்து வீட்டில் வசித்த சிறுவன் உள்ளிட்டோர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 சிறார்கள் உட்பட 15 பேர் மீது போலீஸார் கடந்த 2024-ம் ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக 6 சிறார் மீதான வழக்கு செங்கல்பட்டு சிறார் நீதிமன்றத்திலும், எஞ்சிய 9 பேர் மீதான வழக்கு செங்கல்பட்டு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்திலும் விசாரணையில் இருந்து வந்த நிலையில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை சென்னைக்கு மாற்றக்கோரி பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், “தனது மகள் சென்னையில் படித்து வருவதாலும், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சாட்சியம் அளிப்பதற்கு சாதகமான சூழல் இல்லை என்பதாலும் இந்த வழக்கை சென்னை நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை விடுத்த கோரிக்கையை ஏற்று 6 சிறார்களுக்கு எதிராக செங்கல்பட்டு சிறார் நீதிமன்றத்தில் உள்ள வழக்கையும், 9 பேருக்கு எதிராக செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கையும் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.