

அரியலூர்: பாமக வழக்கறிஞர் பாலு உட்பட 6 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடை வீதியில் டிச.25-ம் தேதி பாமக ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் முடிந்து பாமக நிர்வாகிகள் கார்களில் ஜெயங்கொண்டம் புறப்பட்டனர். அப்போது, தா.பழூர் கடைவீதியில் கீழசிந்தாமணி கிராமத்தை சேர்ந்த பிரசாத் குமார்(43) மற்றும் அவரது உறவினர் மகேந்திரன்(40) ஆகியோர் பொருட்கள் வாங்க வந்த நிலையில், பிரசாத் குமார் தனது இருசக்கர வாகனத்துடன் சாலையோரம் நின்றிருந்தார்.
அப்போது, பாமகவை சேர்ந்தவர்கள் சாலையை விட்டு ஓரமாக நகர சொல்லியதால், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கீழசிந்தாமணியை சேர்ந்த தேவேந்திரன், பனையடியை சேர்ந்த கொளஞ்சி ஆகியோர் பிரசாத் குமாரை சாதி பெயரைச் சொல்லி திட்டியதாகவும், பாமக வழக்கறிஞர் கே.பாலு, பாமக பொறுப்பாளர் டிஎம்டி.திருமாவளவன், மாவட்டச் செயலாளர் தமிழ்மறவன் மற்றும் சிலர் சேர்ந்து பிரசாத் குமாரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இதுகுறித்து கேட்ட மகேந்திரனையும் தாக்கியதுடன், இருவரையும் தா.பழூர் காவல் நிலையத்தில் பாமகவினர் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளனர். இதையடுத்து இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். மேலும், தங்களை தாக்கிய நபர்கள் மீது தா.பழூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, பாமகவை சேர்ந்த தேவேந்திரன், கொளஞ்சி, வழக்கறிஞர் கே.பாலு, டிஎம்டி திருமாவளவன், மாவட்டச் செயலாளர் தமிழ்மறவன், சதீஷ்குமார் ஆகிய 6 பேர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தா.பழூர் போலீஸார் நேற்று முன்தினம் இரவு வழக்கு பதிவு செய்தனர். இதில், சதீஷ்குமாரை(31) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.