

சென்னை: திமுகவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததாக பதியப்பட்ட வழக்கில் பாஜக மாநில இளைஞரணி நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் கோட்டை மைதானத்தில் கடந்த பிப்.10 அன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்று பேசிய பாஜக மாநில இளைஞரணி நிர்வாகியான எஸ்.ஜி.சூர்யா, திமுகவின் நான்கரை ஆண்டுகால ஆட்சி காலத்தில் தமிழகத்தில் மொத்தம் 34 ஆயிரத்து 497 பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் திமுக நிர்வாகிகள் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
அவருடைய இந்த பேச்சு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கிலும், திமுகவை அவமதிக்கும் நோக்கிலும் இருப்பதாகக்கூறி திமுகவைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் சேலம் நகர் போலீஸார் பாஜக நிர்வாகியான எஸ்.ஜி.சூர்யா மீது வழக்குப்பதிவு செய்தனர்.
தனக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.ஜி.சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், இந்த வழக்கில் சேலம் போலீஸார் வரும் ஏப்.16-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார். அதுவரை மனுதாரரான எஸ்.ஜி.சூர்யா மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.