

சென்னை: வட இந்தியாவில் குளிர்கால மூடுபனி அதிகமாக இருப்பதற்கு காற்றின் தூசு, துகள் மாசுபாடு தான் காரணம் என்பது சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் தலைமையிலான சர்வதேச ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வட இந்தியாவில் நிலவும் மாசுபாடு குறித்து சென்னை ஐஐடி சிவில் இன்ஜினீயரிங் துறை இணை பேராசிரியர் சந்தன் சாரங்கி, ஆராய்ச்சியாளர் என்.அருண், சைப்ரஸ் இன்ஸ்டிடியூட்டின் விஜய் பி.கனவாடே, அமெரிக்க சுற்றுச்சூழல் நிபுணர் ரித்தேஷ் கவுதம், அமெரிக்காவின் பசிபிக் நார்த்வெஸ்ட் தேசிய ஆய்வகத்தைச் சேர்ந்த யுன் கியான், இந்தியாவின் பென்னட் பல்கலைக்கழகத்தைத் சேர்ந்த மனோஜ் கே.சிங் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஐஐடி பேராசிரியர்கள் தலைமையில் இந்த சர்வதேச ஆய்வு நடைபெற்றது. இதில், வட இந்தியாவில் குளிர்கால மூடுபனி அதிகமாகவும், அடர்த்தியாகவும் இருப்பதற்கு காற்றில் உள்ள தூசு, துகள் மாசுபாடுதான் காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மாசடைந்த காற்று இரவு நேரங்களில் ஈரப்பதத்தை தக்கவைத்து, நீராவி சுருங்குதலை விரைவுபடுத்துவதுடன் அடர்த்தியான மூடுபனியை நீண்ட நேரம் நீடிக்கச் செய்கிறது என்று தெரியவந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவுகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: ஐஐடி ஆராய்ச்சியாளர் அருண்: மூடுபனி அடுக்கு தொடர்ந்து நீடித்தால், நிலப்பரப்பின் சூரிய வெப்பம் மேலும் குறையும். இது, அடுத்த நாள் இரவிலும் நீராவி சுருங்குவதற்கு சாதகமான சூழலை உருவாக்கும். இதுவரை, மூடுபனி அதிகமாக இருப்பதற்கு புவி வெப்பமடைதலுடன் தொடர்புடைய காலநிலை மாற்றங்களே காரணம் என விஞ்ஞானிகள் நம்பினர். எனினும், மூடுபனி நிகழ்வுகளை அதிகரிக்கச் செய்வதில் காற்று மாசுபாடு முக்கிய பங்கு வகிப்பது எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பேராசிரியர் சந்தன் சாரங்கி: மூடுபனியின் அடர்த்தி, கால அளவு ஆகியவற்றை மாசுபாடு எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த சிறந்த புரிதலை எங்களது ஆய்வுத் தரவுகள் தெளிவாக வழங்குகின்றன. மூடுபனி குறித்த முன்னறிவிப்புகளை மேம்படுத்தவும், பாதுகாப்பான விமானப் போக்குவரத்துக்குத் தேவையான சிறந்த முடிவுகளை விமான நிலையங்கள் முன்கூட்டியே எடுக்கவும் இந்த ஆய்வுத் தகவல்கள் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.