போலி சாதிச் சான்றிதழ் அளித்து தேர்தலில் வெற்றி பெற்றதாக வால்பாறை திமுக எம்எல்ஏ-வுக்கு எதிராக வழக்கு

தேர்தல் ஆணையம், மாநில சரிபார்ப்புக் குழு பதிலளிக்க உத்தரவு
போலி சாதிச் சான்றிதழ் அளித்து தேர்தலில் வெற்றி பெற்றதாக வால்பாறை திமுக எம்எல்ஏ-வுக்கு எதிராக வழக்கு
Updated on
1 min read

சென்னை: இந்து பட்டியலினத்தவர் என போலி சாதிச் சான்றிதழ் அளித்து தேர்தலில் வெற்றி பெற்றதாக வால்பாறை திமுக எம்எல்ஏ-வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அளவிலான சான்றிதழ் சரிபார்ப்புக்குழு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வால்பாறை தனித் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட குட்டி என்ற சுதாகர் வெற்றி பெற்றதை எதிர்த்து, அவரை எதிர்த்து தவெக சார்பில் போட்டியிட்ட ஸ்ரீதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

‘கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வரும் திமுக வேட்பாளரான சுதாகர், தன்னை இந்து பட்டியலினத்தவர் என பொய்யான சாதிச் சான்றிதழ் வழங்கி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். சுதாகர் கிறிஸ்துவ தேவாலயத்தில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டவர். அவரது தந்தை மறைந்த ஆரோக்கியத்தின் உடல் கிறிஸ்துவ தேவாலய மயானத்தில் கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்துவ மதத்தை தீவிரமாக பின்பற்றும் ஒருவர் இந்து பட்டியலினத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியில் பொய்யான சாதிச் சான்றிதழை சமர்ப்பித்து தேர்தலில் வெற்றி பெற்று இருப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது.

எனவே, வால்பாறை திமுக வேட்பாளர் சுதாகரின் சாதிச் சான்றிதழ் விவரங்களை சரிபார்க்க தேர்தல் ஆணையம் மற்றும் மாநில சான்றிதழ் சரிபார்ப்புக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும். அத்துடன் சுதாகர் வால்பாறை தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வெண்ணிலா ஆஜராகி, ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்து, சீக்கிய அல்லது பவுத்த மதங்களைத் தவிர வேறு மதத்தை பின்பற்றுபவர்கள் யாரும் பட்டியல் சாதியினராக கருதப்பட மாட்டார்கள்.

எனவே, இந்து பட்டியலினத்தவர் என பொய்யான சாதிச் சான்றிதழை தாக்கல் செய்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக எம்எல்ஏ சுதாகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி, இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அளவிலான சான்றிதழ் சரிபார்ப்புக் குழு ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்.6-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

போலி சாதிச் சான்றிதழ் அளித்து தேர்தலில் வெற்றி பெற்றதாக வால்பாறை திமுக எம்எல்ஏ-வுக்கு எதிராக வழக்கு
சிறை தண்டனையை எதிர்த்து உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி தொடர்ந்த வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in