

முதல்வர் ஸ்டாலின்
புதுடெல்லி: முதல்வர் ஸ்டாலின் 2011 தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது.
தமிழகத்தில் கடந்த 2011-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் கட்சியின் அப்போதைய பொருளாளர் ஸ்டாலின் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுகவில் சைதை துரைசாமி போட்டியிட்டார்.
தேர்தலின்போது தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகைக்கு அதிகமாக ஸ்டாலின் செலவு செய்ததுடன், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டதாகவும் எனவே அவர், வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரியும் சைதை துரைசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது. சைதை துரைசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் டிஎஸ் நாயுடு ஆஜராகி, கொளத்தூர் சட்டப்பேரவைத் தேர்தலில் திருமங்கலம் ஃபார்முலா பயன்படுத்தப்பட்டு, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. இதற்கு போலீஸ் அதிகாரிகளும் உதவினர். தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் அதிகாரிகளும் பாரபட்சமாக நடந்தனர் என வாதிட்டார்.
ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடும்போது, அரசியல் கட்சி களுக்கு தேர்தல் செலவின கட்டுப்பாடு விதிக்கப்படாதது மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது என்றார். அப்போது வழக்கறிஞர் டி. எஸ். நாயுடு குறுக்கிட்டு வாதிடும்போது, பேரவைத் தேர்தலில் போட்டியிடும் நபர் ரூ.50 முதல் ரூ.70 கோடி வரையும், எம்.பி. தேர்தலில் ரூ.100 முதல்
150 கோடி வரை செலவிடுவதாகவும் தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள் இது குறித்து கண்காணிப்பு தேவை என கருத்து தெரிவித்தனர்.
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் செலவின கட்டுப்பாடு விதிக்கப்படாதது குறித்து கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருவதாகவும், பார் கவுன்சில் தேர்தலில் அதிக அளவில் பணம் செல விடப்படுவதாகவும் கபில் சிபல் தெரிவித்தார். மேலும் மும்பை மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலர் வேட்பாளர் ரூ.100 கோடி அளவுக்கு செலவிடுவதாக கூறப்படுகிறது என்றும் கபில் சிபல் குறிப்பிட்டார்.