மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உட்பட 26 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு 5 வது நாளாக விசாரித்தது.
இறுதி நாள் விசாரணையில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிடுகையில், தெளிவான, உறுதியான ஆவணங்கள், ஆதாரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் தனி நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். கோயிலில் பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வரும் வழக்கத்தை மாற்ற தனி நீதிபதி உத்தரவிட்டது சட்டப்படி செல்லுமா என்பதே வழக்கின் மையக்கேள்வியாக உள்ளது.
கோயில் கலாச்சாரம், ஆகம விதிகள், பூஜை விதிகள், அர்ச்சனை முறைகள், வழிபாட்டு உரிமை சட்டம் ஆகிய அனைத்தும் முறையாகவும் சட்டப்பூர்வமாகவும் இருக்கும் நிலையில், அதனை மாற்றும் வகையில் தனி நீதிபதி உத்தரவிட்டது சரியல்ல. ஒரு தனி நபர் புதிதாக கூறும் கலாச்சாரத்தை ஏற்குமாறு கோயில் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் கோயில், அறநிலையத் துறை, தேவஸ்தானம் மற்றும் அறங்காவலர் குழு ஆகியோரின் ஒருமித்த முடிவின்படி, உச்சிப்பிள்ளையார் மண்டபத்திலேயே வழக்கமாக ஏற்றப்பட்டு வருகிறது. அதற்கு தகுந்த ஆதாரங்கள் கோயில் தரப்பிடம் உள்ளது. இதை மாற்றக் கோரும் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.
மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் என்பதற்கான எந்தவித ஆவணங்களும், வரலாற்று ஆதாரங்களும் இல்லை. 1920-ம் ஆண்டு மாவட்ட நீதிபதி முழு மலையையும் ஆய்வு செய்த போது, மலை உச்சியில் தர்கா மட்டுமே உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அப்போது தூண் இருந்திருந்தால், அது தீர்ப்பில் கண்டிப்பாக குறிப்பிடப்பட்டிருக்கும். தூண் தொடர்பாக எந்த குறிப்பும் இல்லை தீபத்தூண் தொடர்பான பிரச்சினை எழுவதற்கு முன்பே திருநெல்வேலி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள கல் தூண்களின் முக்கியத்துவத்தை சரி பார்க்கும் வகையில் நில அளவத்துறை ஆய்வு மேற்கொண்டது. மலை உச்சியில் தர்கா உள்ள நிலையில், அந்த தூண் எப்போது அமைக்கப்பட்டது என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
தீபம் ஏற்றுவது போன்ற கோயில் நடைமுறைகள் உரிமையியல் தன்மை கொண்டவை. இதுபோன்ற வழக்குகள் உரிமையியல் நீதிமன்றத்தில் தான் விசாரிக்கப்பட வேண்டும். உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி நேரடியாக தலையிட முடியாது. மதுரை பாண்டி கோயில் தொடர்பான வழக்கிலும், அர்ச்சகர் பூஜை செய்யும் உரிமை குறித்து உரிமையியல் நீதிமன்றத்தை அணுகவே தீர்ப்பளிக்கப்பட்டது.
எங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் இறுதி அதிகாரம் அறநிலையத் துறைக்கே உள்ளது. ஒரு கோயிலில் பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வரும் பழக்கவழக்கங்களை திடீர் உத்தரவால் மாற்ற முடியாது. தனி நீதிபதி தனது அதிகார எல்லையை மீறி அவசரமாக உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்று வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் கூறினார்.
வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதிகள் இன்று அறிவித்துள்ளனர்.