

சென்னை: தமிழக முதல்வரின் செயலர் உமாநாத், தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படுவதாக குற்றம்சாட்டி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் ஏ.மோகன்தாஸ் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழக முதல்வரின் செயலரான உமாநாத், தேர்தல் நடத்தை விதிகளை மீறி ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தன்னிச்சையாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அவர் மீது தேர்தல் நடத்தை விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், ‘ஐஏஎஸ் அதிகாரியான உமாநாத்துக்கு எதிராக மனுதாரர் எந்த குற்றச்சாட்டையும் குறிப்பிட்டு முன்வைக்கவில்லை. தேர்தல் விதிகளை மீறி அவர் செயல்பட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, முதல்வரின் செயலர் உமாநாத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.