

சென்னை: பிற மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் ஆம்னி பேருந்துகளுக்கு ஒரே நாளில் பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஏலகிரியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் 300-க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆம்னி பேருந்து தொழிலின் தற்போதைய நிலை, எதிர்கால வளர்ச்சி, தொழிலில் நிலவும் சவால்கள், அரசின் கொள்கைகள், உரிமையாளர்களின் நலன் மற்றும் ஆம்னி பேருந்து பயணிகளின் நலன் கருதிய பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், இந்தியாவின் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து 1,228 சுங்கச்சாவடிகளிலும் ஆம்னி பேருந்துகள் மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு முழுமையான சுங்கச்சாவடி கட்டண விலக்கு வழங்க வேண்டும், மத்திய, மாநில அரசுகள் ஆம்னி பேருந்துகளுக்கான தனித்துவமான பர்மிட் உருவாக்க வேண்டும், மற்ற மாநிலங்களைப் போல ஆம்னி பேருந்துகளுக்கு ஒரே நாளில் பதிவு செய்யும் முறையை தமிழகத்திலும் அறிமுகப்படுத்த வேண்டும்.
சுங்கச்சாவடி விலக்கு வழங்கப்படும் வரை, அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பொதுப் போக்குவரத்து பேருந்துகளுக்கான தனி வழிகள் அமைக்க வேண்டும்.
மின்சார பேருந்துகளுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகளை 2030 வரை நீட்டித்து, ஊக்குவிக்க வேண்டும், மாநிலம் முழுவதும் சார்ஜிங் வசதிகளை விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.