

பி.டி.அரசகுமார்
சென்னை: சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி ஏமாற்றியதாக பி.டி.அரசகுமாரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன், சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் ‘‘சென்னை சாலிகிராமத்தில் 'தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்' என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி வரும் பி.டி.அரசகுமார், தனக்குள்ள அரசியல் மற்றும் அதிகார தொடர்புகளைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயர்வு, டிடிசிபி, சிம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறினார்.
இதன்மூலம், தமிழகம் முழுவதும் பலதனியார் பள்ளி நிர்வாகிகளிட மிருந்து பணம் பெற்றுக் கொண்டு, உறுதியளித்தபடி அனுமதிகள் பெற்றுத் தராமலும், பணத்தை திரும்ப தராமலும் சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்து ஏமாற்றியுள்ளார். எனவே அரசகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரி விக்கப்பட்டிருந்தது.
இப்புகாரின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குபதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீஸார், சாலிகிராமம், மெஜஸ்டிக் காலனியில் வசிக்கும் பி.டி.அரசகுமாரை (59) நேற்று கைது செய்தனர்.