

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வரும் நிலையில், பாஜக-வில் மட்டும் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
இந்தத் தேர்தலில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டிப்பாகப் போட்டியிட வேண்டும் என்பது டெல்லி மேலிடத்தின் விருப்பமாக உள்ளது. ஆனால், ஆரம்பத்திலிருந்தே தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்பதில் அண்ணாமலை உறுதியாக இருந்து வருகிறார். முன்னதாக, சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி உள்ளிட்ட 6 தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். ஆனால், தனது தந்தையின் உடல்நிலையைக் காரணம் காட்டி அந்தப் பொறுப்புகளில் இருந்து அவர் விலகினார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் அண்ணாமலைக்கு உடன்பாடு இல்லாததே இந்த விலகலுக்குக் காரணம் என்று பேச்சு எழுந்தது. தற்போது கட்சியின் வற்புறுத்தலால் தேர்தலில் போட்டியிட சம்மதித்துள்ள அண்ணாமலை, அதற்கும் ஒரு நிபந்தனை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கோவை வடக்கு அல்லது மொடக்குறிச்சி ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒன்றை ஒதுக்கினால் மட்டுமே, தான் போட்டியிடுவதாக அவர் பிடிவாதம் பிடிப்பதாகத் தெரிகிறது. கோவை வடக்கு ஏற்கெனவே வானதி சீனிவாசனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல், மொடக்குறிச்சி தொகுதி சிட்டிங் எம்எல்ஏ-வான சரஸ்வதி, இம்முறை தனது மகளுக்காக அந்தத் தொகுதியைக் கேட்டு அழுத்தம் கொடுத்து வருகிறார்.
மற்ற வேட்பாளர்கள் கட்சித் தலைமை ஒதுக்கும் தொகுதிகளில் போட்டியிடத் தயாராக இருக்கும் நிலையில், அண்ணாமலை மட்டும் குறிப்பிட்ட தொகுதிகளைக் கேட்டு பிடிவாதம் பிடிப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வேட்பாளர் தேர்வு குறித்த இழுபறியைத் தீர்க்க பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் நேற்று முன் தினம் மாலை சென்னை வந்தார். அப்போது புதுச்சேரியில் பிரச்சாரத்தில் இருந்த அண்ணாமலைக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டு, அவரும் ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு வரவழைக்கப்பட்டார்.
கமலாலயத்தில் நடந்த நீண்ட ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, அண்ணாமலை உட்பட அனைத்து தொகுதிகளுக்குமான உத்தேசப் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அண்ணாமலையின் விருப்பப்படி அவருக்கு கோவை வடக்கா, மொடக்குறிச்சியா அல்லது கட்சித் தலைமை அவருக்கு வேறு புதிய வியூகம் வகுத்துள்ளதா என்பது டெல்லி தலைமை அதிகாரபூர்வ பட்டியலை வெளியிடும்போது தான் தெரியவரும்.