“விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்காக பொங்கும் காங்கிரஸ்...” - தமிழிசை பதிலடி கருத்து

“விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்காக பொங்கும் காங்கிரஸ்...” - தமிழிசை பதிலடி கருத்து
Updated on
2 min read

சென்னை: “அவசரநிலை பிரகடனத்தின்போது கருத்து சுதந்திரத்தில் கழுத்தை நெரித்த காங்கிரஸ் இன்று ‘ஜனநாயகம்’ திரைப்படத்துக்காக பொங்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடியாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்த உலகமே மதிக்கும் மிகப் பெரிய ஜனநாயகன் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி. ஜனநாயக முறைப்படி நடக்கும் மதிப்புக்குரிய ஜனநாயகனும் நமது பாரதப் பிரதமர்தான். ஆனால், காங்கிரஸ்காரர்கள் ‘ஜனநாயகன்’ படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததற்கு மத்திய அரசையும், பாரத பிரதமரையும் குறை சொல்லி மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

வழக்காடு மன்றத்திலேயே இந்த சென்சார் சர்டிபிகேட்டுக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

அவசரநிலை பிரகடனத்தின்போது கருத்து சுதந்திரத்தில் கழுத்தை நெரித்த காங்கிரஸ் இன்று ‘ஜனநாயகம்’ திரைப்படத்துக்காக பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். கலையில் இருந்து அரசியலை விலக்கி வைப்போம் என்று காங்கிரஸ் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை.

திரைப்படங்களை நேரடியாக தடை செய்த வரலாறு காங்கிரஸ் ஆட்சிக்கு உண்டு. இது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம். எல்லாவற்றுக்கும் மேலாக திமுகவின் இளங்கோவன் ‘திரைத்துறைக்கு அழுத்தம் தருவதால் அரசியலில் வென்று விட முடியாது’ என்று சொல்கிறார்.

அதுவும் உதயநிதி எவ்வளவு திரைத் துறையினருக்கு அழுத்தம் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதும், திரையரங்குகள் கிடைக்க செய்வதில் கூட இவர்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் உலகம் அறிந்த உண்மை.

சட்ட ரீதியாக CBFC செயல்படுகிறது. அதன் நடைமுறையை அரசியலாக்கி கொண்டு இருக்கிறார்கள்.

விஜய் அரசியலுக்கு வருவது தவறல்ல. ஆனால், அவர் படம் அரசியல் ஆக்கப்படுவதுதான் வேடிக்கையான வேடிக்கை.

சட்ட ரீதியாக சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் ஒரு வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு, அதன் பின்பு அழுத்தம் கொடுப்பது சரியான நடைமுறை அல்ல. சட்ட ரீதியான நடைமுறைகளுக்கு பின்பு ‘ஜனநாயகன்’ ரிலீஸ் ஆகும் தினத்தை நாங்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்’ என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கூறியது என்ன? - முன்னதாக, தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் துஷ்பிரயோகம் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்துகொள்ளக்கூடியவை என்றாலும், ஒரு கலைஞனின் படைப்பை குறி வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

அரசியல் ஆதாயங்களுக்காகத் திரைப்படங்களுக்குத் தணிக்கை செய்வதைத் தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கலையும், பொழுதுபோக்கும் அரசியல் போர்களில் காய்களாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

அதிகாரிகளுக்கு நீங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக விஜய்யின் திரைப்படம் தாமதங்களைச் சந்தித்து வருகிறது, இது தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் அநீதியானது. கலையிலிருந்து அரசியலை விலக்கி வைப்போம், படைப்புச் சுதந்திரத்தை மதிப்போம்.

பிரதமர் மோடி அவர்களே, நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு என்ற கூற்றை நிரூபியுங்கள். உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

“விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்காக பொங்கும் காங்கிரஸ்...” - தமிழிசை பதிலடி கருத்து
‘ஜனநாயகன்’ ரிலீஸ் சிக்கல் - தணிக்கையில் பிரச்சினை என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in