

படம்: ஜெ.மனோகரன்
கோவை: சுதந்திர தினத்தையொட்டி, கோவை மாநகரில் கடந்த 10 ஆண்டுகளாக தேசியக்கொடி ஊர்வலத்தை பாஜக நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, நடப்பாண்டில் தேசியக்கொடி பேரணிக்கு கோவை மாநகர போலீஸாரிடம், மாநகர் மாவட்ட பாஜக சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. இதற்கு போலீஸார் தரப்பில் அனுமதி மறுக்கவே கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தேசியக்கொடி பேரணி கோவையில் நேற்று நடைபெற்றது. கோவை சாய்பாபா காலனியில் மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ரமேஷ்குமார் தலைமையில் தொடங்கிய பேரணியில், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், காமாட்சிபுரம் ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில் 80-ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், 160 அடி நீளத்தில் தேசியக் கொடி தயாரிக்கப்பட்டு ஊர்வலத்தில் பாஜகவினர் பிடித்து வந்தனர். வடகோவை சிந்தாமணி பகுதியில் ஊர்வலம் நிறைவடைந்தது.
இந்த ஊர்வலத்தில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஊர்வலம் நடைபெற்றதால் அதிக எண்ணிக்கையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.