

சென்னை: ‘தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 33 சதவீதம் அதிகரித்துள்ளன’ என்று பாஜக மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமை, சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருவதாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமை தாங்கினார். அதிமுக மகளிர் அணி மாநில செயலாளர் வளர்மதி, அமைப்புச் செயலாளர் கோகுல இந்திரா, பாஜக மாநில துணைத் தலைவர் நடிகை குஷ்பு, மகளிர் அணி மாநிலத் தலைவர் கவிதா ஸ்ரீகாந்த் மற்றும் தமாகா, பாமக, அமமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வானதி சீனிவாசன் பேசியதாவது: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் பழனிசாமி ஆட்சி வரை, தமிழகத்தின் ஒவ்வொரு பெண்ணும் இது நமக்கான ஆட்சி என்று நிம்மதியாக இருந்தார்கள். ஆனால், இன்று ‘திராவிட மாடல்’ என்று மார்தட்டிக் கொள்ளும் இந்த ஆட்சியில், பல்கலைக்கழகங்கள் முதல் பேருந்து நிறுத்தங்கள் வரை எங்குமே பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 33 சதவீதம் அதிகரிப்பு. குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் 52 சதவீதம் உயர்வு, குடும்ப வன்முறை வழக்குகள் 63 சதவீதம் அதிகரிப்பு, பாலியல் குற்றங்கள் 109 சதவீதம் உயர்ந்து தமிழகத்தைப் பின்னோக்கித் தள்ளியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டைச் சட்டமாக்கினால், இங்கே ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 33 சதவீதம் அதிகரித்துள்ளன. இந்த 2026-ம் ஆண்டில் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, இதே இடத்தில் நாம் வெற்றி விழாவைக் கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நடிகை குஷ்பு பேசும்போது, ‘‘அதிமுக ஆட்சியில் ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவித்தொகையும், தாலிக்கு தங்கம் திட்டமும் நடைமுறையில் இருந்தது. அந்தத் திட்டம் இன்று முடக்கப்பட்டுள்ளது. ‘போதும்டா சாமி உங்கள் ஆட்சி’ என்று மக்கள் சொல்லும் நேரம் வந்துவிட்டது’’ என்றார்.