

மதுரை: திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்ததை எதிர்த்து பாஜக கவுன்சிலர் தாக்கல் செய்த வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் தனபாலன். இவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் மாநகராட்சிக் கூட்டம் கடந்த நவம்பர் 26-ம் தேதி நடந்தது. நான் கூட்டத்தில் பேசும்போது, மாநகராட்சிக்கு உட்பட்ட அமைச்சர் சக்கரபாணி உறவினர் வீடு அருகே மழைநீர், சாக்கடை நீர் முழங்கால் அளவுக்கு தேங்குகிறது.
பலமுறை மனு அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அமைச்சர் மீது மேயருக்கு ஏதும் தனிப்பட்ட கோபமா? என்றேன். இதற்கு திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் கூட்டத்திற்கு குந்தகம் விளைவித்தாக கூறி, என்னை 2 கூட்டங்களில் பங்கேற்கக்கூடாது என சஸ்பெண்ட் செய்து மேயர் உத்தரவிட்டார். இதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி விஜயகுமார், மனுதாரரை பணியிடை நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவு மற்றும் மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல் உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.