

புதுச்சேரி பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரான மன்சுக் மாண்டவியாவுடன் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்ற வேட்பாளர்கள்.
புதுச்சேரியில் பாஜக போட்டியிடும் 10 தொகுதிகளில் 9-ல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒரு முன்னாள் அமைச்சர் தவிர அனைவருக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
பாஜக மத்திய தேர்தல்குழு கட்சியின் தேசியத்தலைவர் நிதின் நபின் தலைமையில் கூடியது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் மத்திய தேர்தல் குழு அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றனர். இதில் புதுச்சேரி சட்டப்பேரவையில் என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு 10 தொகுதிகள் போட்டியிடமுடிவு எடுக்கப்பட்டது. இப்பொதுத் தேர்தலில் 9 தொகுதிகள் வேட்பாளர்களை தலைமைப் பொறுப்பாளரும் தேசிய பொதுச்செயலருமான அருண்சிங் நேற்று வெளியிட்டுள்ளார்.
அதன்விவரம்: மண்ணாடிப்பட்டு- அமைச்சர் நமச்சிவாயம், ஊசுடு- எம்எல்ஏ தீப்பாய்ந்தான், காலாப்பேட்டு- எம்எல்ஏ கல்யாணசுந்தரம், ராஜ்பவன் - பாஜக மாநிலத்தலைவர் வி.பிராமலிங்கம், முதலியார்பேட்டை- அமைச்சர் ஜான்குமார், மணவெளி- சட்டப் பேரவைத் தலைவர் செல்வம், திருநள்ளாறு- எம்எல்ஏ ராஜசேகரன், நிரவி டிஆர்பட்டிணம்- மீனாட்சி சுந்தரம், மாஹே- தினேசன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 10 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. தற்போது 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இதில் ஊசுடுவில் வென்ற பாஜக முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவுமான சாய் ஜெ. சரவணன்குமாருக்கு சீட் தரப்படவில்லை.
அதேபோல் என்.ஆர்.காங்கிரஸில் அமைச்சராக உள்ள லட்சுமி நாராயணன் போட்டியிட்டு வென்ற ராஜ்பவன் தொகுதி பாஜகவுக்கு தரப்பட்டுள்ளதால் அவருக்கு வாய்ப்பு தரப்படாது. அதேபோல் மங்கலம் தொகுதியில் அமைச்சர் தேனீ ஜெயக்குமாருக்கு சீட் தராமல் முதல்வர் ரங்கசாமி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. என்.ஆர்.காங்கிரஸில் அமைச்சராக உள்ள இருவருக்கு இம்முறை போட்டியிட வாய்ப்பு தரப்படாது என்பது உறுதியாகியுள்ளது.