

தஞ்சாவூர்: “பாஜக - அதிமுக கூட்டணி, கட்டாயத்தால் உருவாகியிருக்கும் கூட்டணி. மிரட்டல், உருட்டலால் உருவான பிளாக்மெயில் கூட்டணி. உண்மையான அதிமுக தொண்டர்களின் விருப்பத்துக்கு எதிராக, அமித் ஷாவால் திணிக்கப்பட்ட கூட்டணி” என தமிழக முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.
தஞ்சையில் இன்று (ஜன.26) நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் டெல்டா மண்டல மகளிரணி மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையில், “சாதி ஆதிக்க ஒழிப்பு மட்டுமே திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கம் இல்லை. பெண் விடுதலையும்தான் நம்முடைய அடிப்படை.
சாதியால் உயர்வு - தாழ்வு இல்லை என்பதற்காகவும். ஆண் உயர்ந்தவன் - பெண் தாழ்ந்தவர் என நினைப்பதும், நடத்துவதும் தவறானது என்பதை உணர்த்துவதற்காகவும் உருவாக்கப்பட்டது தான் நம்முடைய திராவிட இயக்கம். “சூத்திரர்களைப் போன்று பெண்களும் இழிவானவர்கள்” என்று ஒடுக்கப்பட்ட காலத்தில், இந்த இருவரின் விடுதலைக்காகவும் வாழ்நாளெல்லாம் உழைத்தார் பெரியார்.
திராவிட இயக்கத்தின் தாய் அமைப்பான நீதிக்கட்சி ஆட்சியில்தான், பெண்களுக்கு முதன்முதலாக வாக்குரிமை தரப்பட்டது. அந்த வழித்தடத்தில் வந்த அண்ணா, சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றினார். பெண்களுக்குச் சொத்தில் சம பங்கு உண்டு என்று உரிமை கொடுத்தார் தலைவர் கருணாநிதி.
நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் இன்றைக்கு 1 கோடியே 30 லட்சம் சகோதரிகளுக்கு உரிமைத் தொகை வழங்கிக் கொண்டிருக்கிறேன். பெண்ணுரிமைக்கான ஆட்சியாக - பெண்கள் கேட்காமலேயே அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் ஆட்சியாகத்தான் திராவிட மாடல் ஆட்சி இயங்கி வருகிறது.
இந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு குடும்பமும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களைக் நம்முடைய அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் வீடு வீடாகச் சென்று பரப்புரைச் செய்யும் பெரிய கடமையை பெண்களான உங்களை நம்பித்தான் ஒப்படைத்திருக்கிறேன்.
வீட்டின் வாசல் வரைதான் ஆண்களால் செல்ல முடியும். ஆனால், நீங்கள் நினைத்தால், ஹாலுக்குச் செல்லலாம்; கிச்சனுக்கு செல்லலாம்; ஏன், அந்த வீட்டுப் பெண்மணியின் மனசுக்குள்ளேயே நீங்கள் நுழைய முடியும்.
முக்கியமாக, மகளிரணியினரான நீங்கள், பரப்புரையின் முன்கள வீராங்கனைகளாக நிற்க வேண்டும். ஏன் என்றால், எதிரணியினரின் பொய்ப் பிரச்சாரங்களை, பெண்களான உங்களால்தான் முறியடிக்க முடியும். வாதத்தால் உங்களால்தான் வெல்ல முடியும்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடி , ஏராளமான பொய்களைச் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். உலக வரைபடத்தில் இருக்கும் அத்தனை நாடுகளுக்கும் சென்றுவிட்டு, தேர்தல் காலங்களில் இந்தியாவுக்குள் வருவார் நம்முடைய பிரதமர். இப்போது தமிழ்நாட்டுக்குத் தேர்தல் சீசன் என்பதால், இங்கேயும் வந்தார். இனியும் வருவார்.
பிரதமர் வருகிறார் என்றதும், நான் அவரிடம் பல கேள்விகளை முன்வைத்தேன். அதை நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள்; ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள்; பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். ஆனால் அவர், அது எதற்கும் பதில் சொல்லாமல், வழக்கம்போல் பழைய 'கன்டென்ட்'-டையே பேசிவிட்டு, நமக்கு புது ‘கன்டென்ட்’ கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்று ஒரு அபாண்டமான பொய்யைச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். பெண்களான நீங்களே சொல்லுங்கள்... தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லையா? எப்படி கூச்சமில்லாமல் பொய் பேசுகிறார் பாருங்கள்.
நாட்டில், இப்போது என்ன நடந்துகொண்டு இருக்கிறது? பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில், குறிப்பாக, பா.ஜ.க.வினரால் பெண்கள் படும் தொல்லைகள் என்று அனைத்தையும் தெரிந்துகொண்டே, தமிழ்நாட்டின் மீது அவதூறு பரப்ப விமானத்தில் வந்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
ஆயிரக்கணக்கான பெண்கள் கூடியிருக்கும் இந்த மாநாட்டில் நின்றுகொண்டு, நான் தலைநிமிர்ந்து சொல்கிறேன்... இந்திய மாநிலங்களிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம், எங்கள் தமிழ்நாடுதான். அடித்துச் சொல்கிறேன். இங்குதான், அதிகமான பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள்.
அண்மையில், அவதார் என்ற குழுமம், இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு - ஆரோக்கியம் - கல்வி முதலான சமூகக் காரணிகளில் சிறந்து விளங்கும் நகரங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள். 125 நகரங்கள் கொண்ட அந்தப் பட்டியலில், முதல் 25 நகரங்களில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், வேலூர், ஈரோடு ஆகிய ஏழு நகரங்கள் இருந்தது. இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?
2023-ஆம் ஆண்டு மே மாதம் எரியத் தொடங்கிய மணிப்பூரில், இதுவரைக்கும் அரசு கணக்குப்படி, ஒருவர், இருவர் அல்ல... 260 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும், ஒன்றியத்தை ஆள்வதும் - மணிப்பூரை ஆண்டதும் பா.ஜ.க.தான். ஆனால், நீங்கள் டபுள் எஞ்சின் என்று ஓட்டிய டப்பா எஞ்சின் மணிப்பூர் மக்களை ஏன் காப்பாற்றவில்லை?
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் வீடு – அமைச்சர்கள் வீடு - எம்.எல்.ஏ.க்கள் வீடு - பிரேன் சிங்கின் மருமகனும் எம்.எல்.ஏ.வுமான ராஜ்குமார் இமோசிங் வீடு என்று அனைத்தையும் போராட்டக்காரர்கள் தாக்கி, தரைமட்டம் ஆக்கியிருக்கிறார்கள். ஆனால், மணிப்பூரை ஆண்ட பா.ஜ.க.வால் ஏன் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை? இதுதான், பா.ஜ.க.வின் லட்சணமா?
மாண்புமிகு பிரதமர் அவர்களே... மணிப்பூரையும் - உத்திரப் பிரதேசத்தையும் சென்று பாருங்கள்! ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பா.ஜ.க. ஆளும் இரண்டு மாநிலங்கள் மூலமாகத்தான் போதைப் பொருட்கள் பரவுகிறது என்று ஆதாரங்களுடன் செய்தி வருவதைப் பத்திரிகைகளில் நீங்கள் படிப்பதில்லையா? இது அனைத்தையும் மறைத்துவிட்டு, அமைதியான தமிழ்நாட்டின் மீது அவதூறு பரப்பாதீர்கள்?
அடுத்து, தங்களுக்குச் சாதகமான ஊடகங்கள் மூலமாக, ‘நரேட்டிவ் செட்’ செய்யப் பிரதமர் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். ஏதோ புதிதாகக் கூட்டணியை உருவாக்கிவிட்டது போன்று, அவரும் தோள் உயர்த்தியிருக்கிறார். தோற்ற கூட்டணியை புதுப்பித்துவிட்டு, அதற்கு பில்டப் கொடுத்திருக்கிறார்கள்!
அந்தக் கூட்டணியில் இருக்கும் அனைவருமே, அமலாக்கத்துறை, ஐ.டி, சிபிஐ என்று ஏதோ ஒரு வகையில் பா.ஜ.க.விடம் சிக்கி, அந்த வாஷிங் மெஷின் தங்களையும் வெளுக்காதா என்ற நப்பாசையில், கையைக் கட்டி உட்கார்ந்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.
ஏற்கெனவே, இதே பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி, 2019 தேர்தலிலும் - 2021 தேர்தலிலும் ஒன்றாக நின்று பார்த்தார்கள். தோற்றுப் போனார்கள். அடுத்து, 2024 தேர்தலில், அ.தி.மு.க.வானது பா.ஜ.க. எனும் வேஸ்ட் லக்கேஜ்-ஐக் கழட்டிவிட்டு நிற்கலாம்; பிறகு சேர்ந்து கொள்ளலாம் என்று மறைமுகக் கூட்டணியாக வந்தார்கள். ஆனால், எந்த கெட்டப்பில் வந்தாலும் உங்களுக்கு “கெட் அவுட்”-தான் என்று தமிழ்நாட்டு மக்கள் திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டார்கள்.
இப்போது, திரும்ப பழையபடியே உடைந்துபோனதை எல்லாம் ஒட்டி எடுத்துக்கொண்டு, புதிதாக என்டிஏ அரசு என்று சொல்லிக் கொண்டு வந்திருக்கிறார்கள். அனைவருக்கும் தெரியும். பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி, கட்டாயத்தால் உருவாகியிருக்கும் கூட்டணி. மிரட்டல் உருட்டலால் உருவான பிளாக்மெயில் கூட்டணி. உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பத்திற்கு எதிராக, அமித் ஷாவால் திணிக்கப்பட்ட கூட்டணி. முழுவதும் தன்னுடைய சுயலாபத்துக்காக - வழக்குகளில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தன்னுடைய பதவியைத் தக்க வைத்துக் கொள்ளப் பழனிசாமி உருவாக்கிய சுயநலக் கூட்டணி.
டெல்லிக்கு ரகசியமாகப் பல கார்கள் மாறி மாறிச் சென்று, அங்கு வழக்குகளைக் காட்டி மிரட்டியதும், ஏ.சி. காரிலேயே ஒருவருக்கு முகமெல்லாம் வேர்த்து விறுவிறுத்துப் போனது! எவ்வாறு, கர்ச்சீப் வைத்து, துடைத்துக் கொண்டே வந்தார் என்று நாடே பார்த்தது! அந்தக் காட்சியை நாமும் பார்த்தோம்.
மீண்டும் தங்களின் கண்ணசைவிற்கு ஏற்ப தலையாட்டும் எடுபிடிகளை வைத்துக் கொண்டு, டெல்லியில் இருந்தே தமிழ்நாட்டையும் ஆளலாம் என்று பா.ஜ.க. நினைக்கிறது. உங்களுக்குத் தக்க பதிலடியைத் தமிழ்நாடு தரும். அ.தி.மு.க. ஆட்சி என்ற பெயரில், பா.ஜ.க.வின் ப்ராக்சி ஆட்சி நடந்ததையே ஏற்றுக் கொள்ளாதவர்கள் தமிழ்நாட்டு மக்கள். இப்போது, வெளிப்படையாக பா.ஜ.க. அரசு என்றே சொல்லிக் கொண்டு வந்தால், உங்களை எங்களின் எல்லைக்குள்ளேயே அனுமதிக்க மாட்டோம்.
நடக்கப் போகும் தேர்தல், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி vs என்டிஏ கிடையாது... தமிழ்நாடு vs என்டிஏ மறந்துவிடாதீர்கள். தமிழ்நாடு என்றாலே, தமிழ்நாட்டு மக்களுக்காக உண்மையாக உழைக்கும், நாடே திரும்பிப் பார்க்கும் திட்டங்களைச் செயல்படுத்தும் - தலைநிமிர்ந்து தன்மானத்தோடு போராடும் தி.மு.க.தான். எனவே, நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மீண்டும் வெற்றியை வழங்க மக்கள் தயாராகிவிட்டார்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். தெரிவித்தார்.