

சென்னை: கர்நாடகாவிலும் இருமொழிக் கல்வியைதான் பின்பற்றிவருகிறோம் என்று அம்மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.
தமிழகத்தில் பன்னாட்டு புத்தகக் காட்சியானது பள்ளிக்கல்வித் துறை சார்பில் சென்னையில் 4-வது ஆண்டாக கலைவாணர் அரங்கத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற திமுக எம்.பி. கனிமொழி மற்றும் கர்நாடக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா புத்தகக் காட்சியை தொடங்கி வைத்தனர்.
இந்த விழாவில் ஜெர்மனி பிராங்க்பர்ட் புத்தகக் காட்சி துணைத் தலைவர் (வணிக மேம்பாடு) கிளாடியா கைசர், பிரான்ஸ் துணைத் தூதர் எதியன் ரோலான் பியக், பள்ளிக்கல்வித் துறை செயலார் பி.சந்திரமோகன், இயக்குநர் ச.கண்ணப்பன், கேரள கல்வித்துறை செயலர் வாசுகி, பொது நூலகத் துறை இயக்குநர் ஜெயந்தி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநர் மா.ஆர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் மது பங்காரப்பா பேசும்போது, "தமிழகத்தை பின்பற்றி கர்நாடகாவிலும் சர்வதேச புத்தகக் காட்சியை தொடங்கவுள்ளோம். கிராமப்புறங்களில் சுமார் 5,000 நூலகங்களை அமைத்துள்ளோம். இதன்மூலம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறோம். தினமும் ஒரு கோடி பள்ளி மாணவர்கள் அரசியலமைப்பு முகவுரையை படிக்கிறார்கள். மேலும், இருமொழிக் கல்வியை பின்பற்றி வருகிறோம். தமிழ், மலையாளம், மராத்தி உள்ளிட்ட அதிகம் பேசக்கூடிய மொழிகள் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன" என்றார்.
இந்தப் புத்தகக் காட்சி நாளை (ஜன.18) வரை நடைபெறுகிறது. இதில் 102-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தின் 90 பதிப்பாளர்கள் உள்நாட்டுப் பங்கேற்பில் இடம்பெற உள்ளனர். மேலும் கேரளா, டெல்லி, குஜராத், கர்நாடகா, மராட்டியம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து 42 பதிப்பாளர்கள் பங்கேற்கின்றனர். நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.
பின்னர் கர்நாடக அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தைப் போல கர்நாடகமும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. எங்கள் தாய் மொழியை மதிக்கிறோம். எந்த மாநிலத்திலும் இந்தி திணிப்பை ஏற்க முடியாது. எங்களிடம் மாநிலக் கல்விக் கொள்கை உள்ளதால் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது. கர்நாடகத்துக்கும் கல்வி நிதி தர மத்திய அரசுபாகுபாடு காட்டி வருகிறது. அதற்கும் தமிழகத்துடன் சேர்ந்து போராடி வருகிறோம். மத்திய கல்வித் துறை அமைச்சருக்கு தெரிந்த ஒரே மொழி மோடியின் மொழி. அதுதான் பிரச்சினை’’என்றார்.