தவெக தலைவர் விஜய்
‘எங்களை ‘கொள்கை எதிரி’ என சொல்லும் முன்பு...’ - விஜய்க்கு தமிழக பாஜக அறிவுரை
சென்னை: “கொள்கை எதிரி அடையாளத்தை வழங்குவதற்கு முன்பு மத்திய அரசின் சாதனைகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்” என தவெக தலைவர் விஜய்க்கு பாஜக தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவின் மாநில அமைப்பாளர் அர்ஜுனமூர்த்தி அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியலில் கொள்கை வேறுபாடுகள் இயல்பானவை என்றாலும், ஓர் அரசை விமர்சிக்கும் முன் அதன் செயல்திறன் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை கருத்தில் கொள்ளுவது அவசியம்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு மத பாகுபாடு இன்றி பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் வங்கி வசதி இல்லாத ஏழை குடும்பங்களுக்கு வங்கி கணக்குகள் திறக்கப்பட்டன.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் வீடற்றவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டன. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை பெண்களுக்கு இலவச எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டன.
மேலும், ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் காப்பீடு திட்டத்தின் மூலம் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டங்களின் பயனாளர்களில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்களும் கணிசமான அளவில் உள்ளனர்.
மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளுடன் இந்தியா வலுவான உறவை பேணி வருகிறது. அபுதாபியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட இந்து கோயில் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழ்கிறது. இந்திய பிரதமருக்கு வழங்கப்பட்ட உயரிய விருதுகள் நாட்டின் உலகளாவிய மதிப்பை வெளிப்படுத்துகின்றன.
“சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்” என்ற கோஷத்தின் அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அனைவருடனும் இணைந்து அனைவருக்கும் வளர்ச்சி மற்றும் நம்பிக்கை அளிப்பதே அரசின் நோக்கம்.
தவெக தலைவர் விஜய்க்கு, பாஜக கொள்கைகள் குறித்து வேறுபட்ட பார்வை இருக்கலாம். அது ஜனநாயகத்தின் பலம்தான். ஆனால் “கொள்கை எதிரி” என்ற அடையாளத்தை வழங்குவதற்கு முன், நாட்டின் சிறுபான்மையினருக்காக மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் உலக அரங்கில் ஏற்பட்ட முன்னேற்றங்களை முழுமையாக பரிசீலிக்க வேண்டும்.
கருத்து மோதல்கள் ஜனநாயகத்தின் ஓர் அங்கம் என்றாலும், உண்மை மற்றும் சாதனைகள் குறித்து பேசும் போது விவாதம் சமநிலையுடனும் தகவல் ஆதாரத்துடனும் இருக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
