

புதுடெல்லி: பொது இடங்களில் கால்நடைகளை வெட்ட உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளரான கோவை, செல்வபுரத்தைச் சேர்ந்த சூர்ய பிரசாந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவை துடியலூர் சந்தை, உக்கடம், ரத்தினபுரி மசூதி போன்ற பல்வேறு இடங்களில் மாடுகள் வெட்டப்பட உள்ளன.
அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தாண்டி பொது இடங்களில் மாடுகளை வெட்டக் கூடாது என்றும், மாடுகளை வெட்டும் முன்பாக அவை முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதா என்றும், கன்றுக்குட்டிகள் வெட்டப்படுகின்றனவா என்றும் சோதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு கடந்த மே 27-ம் தேதி விசாரித்தது. ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020-ம் ஆண்டு பொது இடங்களில் மாடுகளை வெட்டக் கூடாது எனத் தடை விதித்துள்ளது. 1976-ல் தமிழக அரசும் பசுவதையை தடை செய்து அரசாணை பிறப்பித்துள்ளது.
அனுமதிக்கப்பட்ட இடம் தவிர...
எனவே, தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை மட்டுமல்லாது மற்ற நாட்களிலும் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து பொது இடங்களில் எந்தவொரு விலங்கினங்களையும் வெட்டக்கூடாது. அவ்வாறு பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படவில்லை என்பதை தமிழக அரசின் தலைமைச் செயலரும், சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யும் உறுதி செய்ய உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்கறிஞர் ஜெய் நரசிம்மன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மனுதாரர் கோராத கோரிக்கையைத் தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் மாடுகளை வெட்டுவதற்கான தடையை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மனுதாரர் எழுப்பாத பிரச்சினைகளையும் உயர் நீதிமன்றம் விவாதித்துள்ளது.
தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்பு சட்டம், தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சிகள் சட்டம் விலங்குகளை பலியிடுவதை முறைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதே தவிர தடை செய்வதற்காக உருவாக்கப்படவில்லை.
எனவே சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இதனிடையே இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்யும்போது தனது தரப்பு கருத்தையும் கேட்கக் கோரி சூரிய பிரசாந்த் சார்பில் பிவி யோகேஸ்வரன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.