

கோப்புப் படம்
சென்னை: தேர்தல் ஆணையம், மாவட்டத் தேர்தல் அதிகாரி அல்லது தேர்தல் நடத்தும் அதிகாரியால் முறையாக வழங்கப்பட்ட, செல்லுபடியாகும் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் வாக்கு எண்ணும் மையத்தில் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். செல்போன், கேமரா மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டுவர அனுமதி இல்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், தமிழகம் முழுவதும் உள்ள 62 வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்த மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 18 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், 62 மையங்களிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்கள்:
# வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அங்கீகரிக்கப்படாத நபர்கள் நுழைவதை தடுக்க, 3 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. மையங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட நபர்களின் அடையாளம், அங்கீகாரத்தை சரிபார்க்க வெளிப்புற வளையத்தில் போதுமான காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
# தேர்தல் ஆணையம், மாவட்டத் தேர்தல் அதிகாரி அல்லது தேர்தல் நடத்தும் அதிகாரியால் முறையாக வழங்கப்பட்ட,செல்லுபடியாகும் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் யாரும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். நுழைவை ஒழுங்குபடுத்தவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் நுழைவுவாயிலில் உயர் அதிகாரிகள் பணியில் ஈடுபடுகின்றனர்.
# தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் அங்கீகார அட்டைகளைக் கொண்ட ஊடகத்தினர் மட்டும் கையடக்க கேமரா, வீடியோ கேமராக்களுடன் மையங்களில் குறிப்பிட்ட எல்லை வரை அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்களுக்கு அனுமதி இல்லை.
# தேர்தல் பார்வையாளரைத் தவிர வேறு யாரும் வாக்கு எண்ணும் கூடத்துக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
# கூர்மையான பொருள், தீக்குச்சி, கம்பி, லைட்டர், வெடிபொருள், எளிதில் தீப்பற்றக்கூடியவை, தடைசெய்யப்பட்ட பொருட்களான மண்ணெண்ணெய், செல்போன், கேமராக்கள் போன்ற மின்னணு சாதனங்கள் போன்றவற்றை மையத்துக்குள் யாரும் கொண்டுவரக் கூடாது.
# மையத்தில் இருந்து தனி நபர்கள் உள் மற்றும் வெளிப் பாதுகாப்பு வளையத்துக்கு இடைப்பட்ட பகுதியில் குடிநீர் அருந்த வெளியே வரலாம். ஆனால், நுழைவுவாயிலில் முழுமையான சோதனைக்குப் பிறகே மீண்டும் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
# பலமுறை நுழைவதற்கான அனுமதிச் சீட்டு இல்லாமல் வெளிப் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி வெளியே செல்லும் யாரும் மீண்டும் உள்ளே நுழைய அனுமதி இல்லை. முகவர்கள் அந்தப் பகுதியைவிட்டு வெளியேறினால், மீண்டும் உள்ளே நுழைய முடியாது.
# போதையில் இருக்கும் யாரும் வாக்கு எண்ணும் மைய வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.இவ்வாறு காவல் துறை தெரிவித்துள்ளது.