

சென்னை: தமிழகத்தில் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது என்றும், தமிழகம், புதுச்சேரியில் நாளை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தினமும் பல நகரங்களில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது.
பகலில் கடும் வெயிலும், மாலை மற்றும் இரவில் கடும் புழுக்கமும் நிலவி வருகிறது. அதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் நாளை அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கி வரும் மே 28-ம் தேதி வரை 25 நாட்களுக்கு நீடிக்க உள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் மே 9-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு சத்தீஸ்கர் முதல் குமரிக்கடல் வரை தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழகம் வழியாக, சுமார் 1.5 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (மே 4) முதல் மே 9-ம் தேதி வரை ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, கரூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும், 5-ம் தேதி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
6-ம் தேதி நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், 7-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களிலும், 8-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும், 9-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில்) கனமழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரியில் நாளை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். 5 முதல் 7-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவிலேயே இருக்கும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் 10 செமீ, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 8 செமீ, மதுரை மாவட்டம் சோழவந்தான், சாத்தயார், தானியமங்கலத்தில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.