

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான நியமன மன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட பா.ஜான்சி உமா மற்றும் பா.பாலாஜி ஆகியோர்மாமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து, பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், அம்பத்தூர் மண்டலத்தில் 400 தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் பெயரை விதிகளை மீறி பயன்படுத்தி ரூ.1 கோடி வரை முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து வெளிநடப்பு செய்தார். அதனைத் தொடர்ந்து, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதை வன்மையாக கண்டிப்பதாக காங்கிரஸ் கவுன்சிலர் எம்.எஸ்.திரவியம் பேசினார்.
ஒரே இடத்தில் முழு நேரமாக அல்லது பகுதி நேரமாக 25 சதுர அடிக்கு மேற்பட்ட பரப்பில் சாலையோரம் வியாபாரம் செய்வோர் மற்றும் மோட்டார் வாகனத்துடன் நடமாடும் வியாபாரம் செய்வோர் ஆகியோருக்கு ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் (மாதம் ரூ.250), தள்ளு வண்டி வியாபாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1500, தலைச் சுமையாக கொண்டு செல்லும் வியாபாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.250 எனக் கட்டணம் நிர்ணயித்து வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் பணிபுரியும் 29,455 தூய்மைப் பணியாளர்களுக்கு 200 வார்டுகளிலும் உடை மாற்றும் அறை, கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறைகளை ரூ.29.70 கோடியில் அமைக்க அனுமதியளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையில் ஆக்ரோஷமான தன்மை கொண்ட வளர்ப்பு நாய் இனங்களான பிட்புல், ராட்வீலர் இனங்களை சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வளர்ப்பதற்குத் தடை விதிக்கவும், அவற்றுக்கு செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெற விண்ணப்பிப்பதற்கும், உரிமத்தை புதுப்பிப்பதற்கும் இன்று (டிச.20) முதல் தடை விதிக்கவும், இந்த நாய்களை வீட்டுக்கு வெளியே அழைத்துச் செல்லும்போது அவற்றுக்கு கழுத்துப்பட்டை, வாய்க்கவசம் அணிவிப்பதை கட்டாயமாக்கவும், இதை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கவும், உரிமம் இன்றி சட்ட விரோதமாக இந்த நாய்களை புதிதாக வாங்கி வளர்ப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அரசு அலுவல கங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து, காப்பகங்களில் பராமரிக்கவும், அப்பணிகளை மேற்கொள்ளும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு, ஒரு நாய்க்கு நாளொன்றுக்கு ரூ.50 பராமரிப்பு செலவாக மாநகராட்சி தருவதற்கும் மன்றக் கூட்டத்தில் அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நேற்றைய கூட்டத்தில் மொத்தம் 110 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.