

சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தாமஸ். இவருக்கு ஏழுகிணறு குட்டி மேஸ்திரி தெருவில் 2 கட்டிடங்கள் உள்ளன. இதில், சுமார் 40 ஆண்டுகள் பழமையான ஒரு கட்டிடத்தின் தரைத்தளத்தில் 4 கடைகளும், முதல் தளத்தில் 4 வீடுகளும் உள்ளன.
இந்நிலையில், நேற்று அதிகாலை அந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள பால்கனி திடீரென இடிந்து சாலையில் விழுந்தது. அப்போது அந்த பகுதியில் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆட்டோ மற்றும் 7 இருசக்கர வாகனங்கள் மீது கட்டிட இடிபாடுகள் விழுந்தன.
இதில் 8 வாகனங்களும் சேதமடைந்தன. தகவல் அறிந்த ஏழுகிணறு போலீஸார் உடனடியாகச் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கட்டிட இடிபாடுகளை அகற்றி, சேதமடைந்த வாகனங்களை அங்கிருந்து மீட்டனர்.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வாகனங்கள் சேதடைந்ததையடுத்து, அதன் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் ஏழுகிணறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.