

சென்னை: குதிரை பேர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்பட ஆறு பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக திருவல்லிக்கேணி போலீஸார், 14 பேரை கைது செய்துள்ளனர். இவர்களில், ஐந்து பேர் இதுவரை ஜாமீன் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, தியாகராஜன், ராஜேஷ், கணேசன், சீனிவாசன், செல்வம் ஆகிய ஆறு பேர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இதேபோல, இந்த வழக்கு தொடர்பாக தீபக், செல்வரங்க முருகன், அழகேசன், சக்திவேல் ஆகிய நான்கு பேர் முன் ஜாமீன் கோரியும் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், வழக்கில் கைதாகியுள்ள திருநாவுக்கரசு, தியாகராஜன் உள்ளிட்ட ஆறு பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதேபோல தீபக் உள்பட நான்கு பேருக்கு முன்ஜாமீன் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.