

முதல்வர் விஜய் தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்ற தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
தமிழக சட்டப்பேரவை நீண்ட, நெடிய பாரம்பரியம் கொண்டது. அடுக்குமொழிப் பேச்சுகள், காரசார விவாதங்கள், ஆளுங்கட்சியை அதிரவைத்த எதிர்க்கட்சிகளின் கேள்விகள், வெளிநடப்புகள், உறுப்பினர்களை அவையிலிருந்து குண்டுக்கட்டாக அப்புறப்படுத்திய, பேப்பர் முதல் சட்டை வரை கிழிந்த நிகழ்வுகள் என பற்பல சம்பவங்களின் சாட்சியாக நிற்கும் புனித ஜார்ஜ் கோட்டை மீதுதான் ஜூன் 18 அன்று தமிழகத்தின் ஒட்டுமொத்த கவனக் குவிப்பும் இருந்தது எனலாம்.
தமிழக முதல்வராக விஜய், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி பேரவை கூட்டத் தொடரில் எப்படிக் களமாடுவார்கள் என்ற எதிர்பார்ப்புதான் அதற்குக் காரணம்.
அன்றைய தினம் (ஜூன் 18) சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியில் உதயநிதி தலைமையிலான திமுக எம்எல்ஏக்கள் ‘வாயை திறங்க சிஎம்’ என்று எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்தும், ஆளுங்கட்சியைக் கேள்வி கேட்கும், விமர்சிக்கும் வாசகங்கள் கொண்ட விதவிதமான பதாகைகளை ஏந்தியும் வந்திருந்தனர். அன்றைய தினம் ஆளுநர் உரை வாசிக்கப்பட்டது.
இரண்டாவது நாளான ஜூன் 19 அன்று முதல்வர் விஜய், மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கையை எதிர்த்து தனித் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அதன் மீது எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசின் முயற்சிகளில் உடன் இருப்போம்” என்று பாந்தமாகக் கூறினார். மேகேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கையைக் கூட உடனடியாக ஏற்றார் முதல்வர் விஜய்.
இந்த நடவடிக்கைகள் வெகுவாக கவனம் ஈர்த்தன. ஏன் சிலர் சமூக வலைதளங்களில், ‘காரசார விவாதத்தை எதிர்பார்த்தோம், சண்டை போடுங்களேன்’ என்று மீம்ஸ் எல்லாம் போட்டார்கள்.
ஜூன் 20, 21 விடுமுறைக்குப் பின்னர் நேற்று (ஜூன் 22) சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “மின்வெட்டு பிரச்சினையால் தொழில் முதலீடுகளை கோட்டைவிட்டு விடாதீர்கள்” என்று கூறி தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பற்றி முக்கியமான கருத்துகளை முன்வைத்தார்.
இந்த நிலையில், கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று தமிழக முதல்வர் விஜய் தனது பதிலுரையில் பேசியது அக்கட்சியினர் மத்தியில் வரவேற்பையும், தமிழக மக்கள் மத்தியில் பரவலாக இருவேறு விதமான கருத்துகளையும் ஈர்த்திருக்கிறது.
முதல்வர் விஜய் இன்று பேசுகையில், சொன்ன குட்டிக் கதைதான் ஹைலைட் விவாதப் பொருளாகியுள்ளது.
“ஒரு ஊரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்பதால் பெரியர் ஒருவர் கண்கள் மீது கையை வைத்து மறைத்தபடி சுற்றும் முற்றும் பார்த்து தேடிக் கொண்டிருந்தார். அப்போது உடன் இருந்த சிறுவன் என்ன தேடுகிறீர்கள் எனக் கேட்டான். அதற்கு ‘ஒன்றுமில்லை தம்பி, உங்கள் அப்பா இங்கே தான் இருப்பார் எனச் சொன்னார்கள். அவரைத் தேடிக்கொண்டு இருக்கிறேன். எங்க உங்க அப்பாவை காணோம். அவரை தான் தேடிக்கொண்டு இருக்கிறேன்’ என சொன்னாராம்” என்று குட்டிக் கதையை கூறினார் முதல்வர் விஜய்.
“இதனால் யாரும் டென்ஷன் ஆக வேண்டாம்,” என்று தொடர்ந்து அவர் பேசியது அப்பட்டமாகவே ஸ்டாலினையும், உதயநிதியையும் கிண்டலடித்துப் பேசியது என்று தெரிந்தததால் திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பும் செய்தனர்.
முதல்வர் விஜய்யின் உடல்மொழி பிரச்சார மேடைகளில் இருந்ததுபோலவே சட்டப்பேரவைக்குள் இருப்பதும், இயல்பாக அவை நடவடிக்கைகளில் ஈடுபடாமல் எழுதிக் கொடுத்ததை வாசிப்பதும், நடித்துக் காட்டுவதும் போல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
“என்னைப் பேசு, பேசு என்றால், ஐந்து நிமிடங்கள் கொளத்தூரில் பேசியதற்கே என்னவானது என்று தெரியும்” என்று கூறியதுடன், அன்று கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிவின்போது அப்போதைய முதல்வர் ஸ்டாலின் செய்த சைகையை, பேரவையில் இன்று முதல்வர் விஜய் செய்த விதம் அத்தனை நாகரிகமானதாக இல்லை என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
“முதல்வர் விஜய் இன்னும் பிரச்சார பாணியிலே பேசுகிறார். நம் கையில்தான் தமிழக அரசு இப்போது இருக்கிறது என்பதை உணர வேண்டும். அதை முன்னோக்கி எடுத்துச் செல்வதைத்தான் திட்டமிட வேண்டுமே தவிர திமுக vs தவெக அரசியல் சட்டப்பேரவைக்கு உள்ளே அல்லாது வெளியேதான் செய்ய வேண்டும்,” என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
அதுபோலவே, திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவால் இந்த ஆட்சியை அமைக்கவில்லை என்று விஜய் பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதாலேயே தவெகவுக்கு ஆதரவு கொடுத்தோம்” என்று தெரிவித்துள்ளார்.
‘தமிழக அரசியலுக்கும், தமிழக சட்டப்பேரவைக்கும் புதியவரான விஜய் அவை நாகரிகம், கூட்டணி நாகரிகம் எல்லாம் தெரிந்து கொண்டு வாய் திறக்க வேண்டும். வாயைத் திறக்கமாட்டேன். திறந்தால் அது கொண்டு திமுகவை மட்டுமே விமர்சிப்பேன் என்ற போக்கு என்பது பண்பட்டது அல்ல’ என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
அதேவேளையில், “விஜய் ஊழல் ஒழிப்பு சவால் விடுகிறார் என்றால் அவர் ஒரு க்ளீன் ஸ்லேட். அதனால்தான் ‘நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம், யாரையும் செய்யவிட மாட்டோம், இதற்கு முன்னால் செய்தவர்களையும் சும்மா விடமாட்டோம்’ என்று சவால் விடுகிறார்” என்று பாராட்டுகின்றனர் தவெகவினர்.
“இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அவர் சொன்னதுபோல் அண்ணாவின் ஆட்சியை ஏற்படுத்தியிருக்கிறார். எம்ஜிஆரின் வெற்றியைப் போல் 1977 புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார். ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என தமிழக அரசியலில் ஒரு புதிய போக்கினை உருவாக்கியிருக்கிறார்” என்று சமூக வலைதளங்களில் இளைஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
“அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவார். அவர் பேச வேண்டும் என்பதைவிட அவர் செய்கைகள் பேச வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். அவருடைய செயல்பாடு பேசப்படும் என்று நம்புகிறோம்” என்று தவெக தீவிர விசுவாசிகள் கூறுகின்றனர்.
ஏன், முதல்வர் விஜய்யின் தந்தையும் கூட அண்மையில் அளித்தப் பேட்டியில், “விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா?” என்ற கேள்வியையே முன்வைத்திருக்கிறார்.
இங்கே சில தலைவர்களின் எதிர்வினைகளும் சுட்டிக்காட்டத்தக்கது. “முதல்வர் விஜய் சினிமாவில் நடிப்பது போலவே நினைத்துக் கொண்டு சட்டப்பேரவையிலும் இருக்கிறார். சட்டமன்ற மரபுப்படி இவ்வாறு செய்கைகளை காட்டக் கூடாது. இதுபோன்று முன்பு செய்தவர்களின் நிலை என்ன ஆனது என்பதும் உங்களுக்குத் தெரியும். இனிமேலாவது முதல்வர் தனது தகுதியை அறிந்து, அதற்கான சட்டப்பேரவை மரபோடு நடந்து கொள்ள வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
“தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு முதல்வர் விஜய் வழங்கிய பதிலுரை, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அது ஆவேசம், ஆக்ரோஷம், நக்கல், நையாண்டி கலந்த புளித்துப்போன சினிமா வசனங்களின் தொகுப்பாகவே அமைந்தது. சட்டப்பேரவையையே ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி சினிமாவில் பேசுவது போல வசனங்களை அடுக்குவது, ரீல்ஸ் போட உதவுமே தவிர, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவாது” என்று சாடியிருக்கிறார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
விஜய்யின் பேச்சுகளை சுட்டிக்காட்டும் அதேவேளையில் உதயநிதியின் எதிர்வினையையும் குறிப்பிட வேண்டும் என்கின்றனர் அரசியல் நடுநிலையாளர்கள்.
“செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்” என்று உதயநிதியும் தனிப்பட்ட முறையிலான விமர்சனத்தை வைத்திருக்கிறார். அதை அவைக்குள் சொல்லாதது வரவேற்கத்தக்கது. ஆனாலும், விஜய்யின் மனைவி பாதிக்கப்பட்ட பெண்ணாக இருக்கும் வேளையில், ‘ஒரு பெண்ணை மாண்போடு நடத்துவது எங்கள் பெருமித அடையாளம்’ என்று சொல்லிக் கொள்ளும் உதயநிதி சொல்லியிருக்க வேண்டாம்,” என்று சுட்டிக் காட்டுகின்றனர்.
அதேவேளையில், முதல்வர் விஜய்யின் ஆக்ஷன்களையும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் ரியாக்ஷன்களையும் வரவேற்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், “சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது. தமிழகத்தின் அரசியல் மாறியுள்ளதைப் பார்க்க முடிகிறது. எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதும், முதல்வர் பேசும் மாடலும் மாறியுள்ளது. இந்த மாற்றத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழக அரசியல் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்துள்ளது” என்று பாசிட்டிவ் நோட் தருகிறார்.
அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ள கருத்தும் இங்கே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
“முதல்வர் பொறுப்புக்கு விஜய் புதியவர். விரைவில் அவர் தன் கடமையை உணர்ந்து அவரே சட்டமன்றத்தில் கேள்விகளுக்கு பதில் அளிப்பார். சட்டமன்றம் என்பது கேலி செய்யும் அரங்கம் அல்ல. ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் வேறு வேறு அல்ல, இரண்டுமே ஜனநாயகத்துக்கு வலு சேர்க்கும் இரு தூண்கள்.
முதல்வர் விஜய் எப்படிப் பேசுகிறார் என்பதை விட, அவர் எந்தக் கொள்கை வழியில் நடக்கிறார் என்பதுதான் முக்கியம்” என்கிறார் மு.வீரபாண்டியன்.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரிலாவது ரீல்ஸ் ஆட்சி, குட்டிக் கதை, வாயைத் திறங்க சிஎம் போன்ற அரசியலை விடுத்து, சிறந்த ஆட்சிக்கான முன்னெடுப்புகளையும், வலுவான எதிர்க்கட்சிக்கான பங்களிப்பையும் விஜய்யும், உதயநிதியும் தருவார்களா என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.