

சென்னை: முல்லை பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக்குக்கு நன்றிக்கடனாக, கலாச்சார இணைப்புத் திட்டத்தில் கேம்பர்லீ - மதுரை நகரங்களை கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் பொங்கல் திருநாளில் கையெழுத்தாக உள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையை கட்டியவர் பொறியாளர் ஜான் பென்னி குயிக். பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த அணையை அவர் கட்டி முடித்தார்.
அவரது நினைவைப் போற்றும் வகையில் தேனி மாவட்டம் கூடலூரில் பென்னி குயிக் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. மேலும், அவர் பிறந்த கேம்பர்லீ நகரத்தில் தமிழக அரசு சார்பில் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து கலாச்சார இணைப்புத் திட்டத்தின்கீழ் மதுரை மற்றும் கேம்பர்லீ நகரங்களைக் கொண்டுவர தமிழக அரசு முடிவுசெய்தது. இது தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த செப்.9-ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.
அந்தவகையில் இரு நகரங்களுக்கும் இடையேயான கலாச்சார இணைப்பு ஒப்பந்தம் பொங்கல் திருநாளில் மதுரையில் கையெழுத்தாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கேம்பர்லீ தமிழர் பிரிட்டீஷ் அசோசியேஷன் செயலாளர் சந்தான பீர் ஒலி கூறியதாவது: இந்த ஒப்பந்தம் இரு நகரங்களுக்கு இடையே வரலாற்று ரீதியான தொடர்பை புதுப்பிப்பதுடன், எதிர்கால வளர்ச்சிக்கும் வித்திடும். குறிப்பாக கலாச்சார பரிமாற்றம், தொழில் முதலீடுகள், கல்வி போன்ற அம்சங்களை மேம்படுத்தும்.
அதன்படி சர்ரே மாகாணத்தின் மேயர் லூயிஸ் ஆஷ்பெரி தலைமையிலான குழுவினர் தமிழகத்துக்கு ஜன.11-ம் தேதி வருகை தரவுள்ளனர். அன்றைய தினம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்தித்து ஒப்பந்தம் குறித்து கலந்துரையாட உள்ளனர். அதன்பின்னர் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களுக்குச் சென்று ஜன.14-ம் தேதி பொங்கல் விழாக்களில் பங்கேற்கவுள்ளனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளையும் அவர்கள் பார்வையிடுகின்றனர். இறுதியாக இரு நகரங்களின் ஆணையர்களும் ஜன.16-ம் தேதி கலாச்சார இணைப்பு திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர். பென்னி குயிக் என்ற மாமனிதருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இது அமையும். இவ்வாறு அவர் கூறினார்.