இந்திய பாதுகாப்பு படைகளின் முதலாவது தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட பகுதியில், மலர்வளையம் வைத்து ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
ஜெனரல் பிபின் ராவத் 4-ம் ஆண்டு நினைவு தினம்: ராணுவ அதிகாரிகள் அஞ்சலி
குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரிக்கு வருவதற்காக, கடந்த 2021-ம் ஆண்டு டிச.8-ம் தேதி அப்போதைய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு வந்தார்.
அங்கிருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு எம்.ஐ. ரக ஹெலிகாப்டரில் வந்தபோது நஞ்சப்பா சத்திரம் கிராமம் அருகே நடந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட14 பேர் உயிரிழந்தனர்.
இந்த துயரச் சம்பவம் நடைபெற்று 4-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள நினைவுத் தூணில் ராணுவப் பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் மனீஷ் ஆரி, மேஜர் ஜெனரல் யாதவ் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். ராணுவ இசையுடன் ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தியபின் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
