

சென்னை: டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, எம்ஆர்பி மூலம் அரசு பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 9,801 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார். போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கான ‘தேர்வுக் களம்’ என்ற செயலிமற்றும் ‘எளிமை ஆளுமை’ திட்டத்தில் கூடுதலாக எளிமைப்படுத்தப்பட்டுள்ள 50 அரசு சேவைகளையும் முதல்வர் அறிமுகம் செய்கிறார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி), தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவப் பணியாளர்கள் 9,801 பேர் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.
மேலும், சென்னை ஷெனாய் நகரில் ரூ.62,50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். அதேபோல, அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வு நடைமுறைகளை எளிதாகக் கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘தேர்வுக் களம்’ என்ற செயலியையும், ‘எளிமை ஆளுமை’ திட்டத்தில் கூடுதலாக எளிமைப்படுத்தப்பட்டுள்ள 50 அரசு சேவைகளையும் முதல்வர் அறிமுகப்படுத்துகிறார்.
இந்த விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.