

புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்ட அரசு பணி ஆணை கருணை அடிப்படையிலானது அல்ல, மாறாக குடும்பத்தின் மறுவாழ்வுக்கான நடவடிக்கை ஆகும், எனவே சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்தாண்டு செப்டம்பரில் தற்போதைய முதல்வர் விஜய் பங்கேற்ற தவெக பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாயினர், 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி கரூர் சென்ற முதல்வர் விஜய், தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.
இதையடுத்து, இந்த நடவடிக்கைக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தீரன் திருமுருகன், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சீனி அகமது உட்பட மூன்று பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அந்த, வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.இதை யடுத்து இந்த விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த நிலையில், பணியாணை ரத்து விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, பணி நியமன ஆணை ரத்தால் பாதிக்கப்பட்டவர்களாகிய பிரபாகரன் செல்வகுமார் மற்றும் பி.ஆனந்த ஜோதி ஆகியோர் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அதில், ஆனந்த ஜோதியைப் பொறுத்தவரை தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கரூர் கூட்ட நெரிசலில் இழந்ததாக தெரிவித்துள்ளார்.
அவர் தனது மனுவில், ‘தற்போது பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாணை பெற்றேன். ஆனால் அது சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றம், அரசு வழங்கிய பணி ஆணை கருணை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதால் அது அரசியலமைப்பின் பிரிவு 14 மற்றும் 16 ஆகியவற்றை மீறும் செயல் என்று தெரிவித்திருக்கிறது.
இது சென்னை உயர் நீதிமன்றத்தின் தவறான கண்ணோட்டமாகும். மேலும், அரசு வழங்கிய பணி ஆணை என்பது கருணை அடிப்படையில் ஆனது அல்ல. மாறாக ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காகவும், குடும்பத்துக்கு மறுவாழ்வு அளிப்பதற்காகவும் வழங்கப்பட்டது.
எனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவானது இயற்கை நீதிக்கு எதிரானது, மேலும் அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றம் தனது அதிகார வரம்பை நுழைத்துள்ளது. எனவே கரூர் விவகாரத்தில் பணி ஆணை வழங்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து, மனுதாரர்கள் தாக்கல் செய்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.