

கோப்புப் படம்
சென்னை: கிராமசபை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் உள்ளிட்ட செயல்பாடுகளை அறிந்துகொள்ள புதிய செயலியை ஊரக வளர்ச்சித் துறை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 12,571 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளின் கணக்கு வழக்குகள், முக்கிய தேவைகள் குறித்து ஆலோசனை செய்து தீர்மானம் நிறைவேற்ற ஆண்டுதோறும் 6 முறை கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கூட்டம் ஊராட்சித் தலைவரால் கூட்டப்படும். அப்போது, கிராமத்தின் தேவைகள் மற்றும் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்த திட்ட அறிக்கையை, அரசு அதிகாரி முன்னிலையில் பொதுமக்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அதேபோல், ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்துக்கு இணையான அதிகாரம், கிராம சபைக் கூட்டங்களுக்கு உள்ளது. இந்நிலையில் கிராமசபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் உள்ளிட்ட தகவல்களை பொதுமக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக கிராமசபை செயலியை ஊரக வளர்ச்சித்துறை உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறும்போது, “கிராமசபை நடவடிக்கைகளை இளைஞர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் அறிந்து கொண்டால் உள்ளாட்சி நிர்வாகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்க முடியும். இதற்காக கிராமசபையின் நிகழ்ச்சி நிரல், நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் உள்ளிட்ட தகவல்களை கிராம மக்கள் அறியும் விதமாக, புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி விரைவில் செயல்பாட்டுக்கு வரும். அக்.2-ம் தேதி நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்தில் இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும், இந்த செயலி மூலமாக வருங்காலத்தில் ஊராட்சி அமைப்புகளில் நடைபெறும் ஒப்பந்தங்கள், திட்டப்பணிகள் உள்பட பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் வழிவகை செய்யப்படும்” என்றனர்.