

சென்னை: தமிழக பாஜகவை சீர்குலைத்த தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா செய்யாமல், கட்சிக்கு உழைத்த தொண்டனிடம் ரூபாய் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுப்பது நியாயமா? என தமிழக பாஜக மாநில முன்னாள் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளராக அர்ப்பணிப்புடன் உழைத்த எனக்கு, கட்சித் தலைமையை விமர்சித்ததாகக் கூறி, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல் முருகன் தூண்டுதலின் பேரில் தமிழக பாஜக சார்பாக ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு எனக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ் திரும்பப் பெற பட வேண்டும்.
தமிழக பாஜக உறுப்பினராக நான் நீக்கப்பட்டதை உடனடியாக ரத்து செய்து ஒரு வலிமையான பாஜக தொண்டராக தொடர தாயுள்ளத்துடன் அனுமதிக்க வேண்டும். தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சராக எல்.முருகன் நீடிக்கும் வரை கட்சியின் எந்தப் பொறுப்பிலும் நான் செயல்பட விரும்பவில்லை.
நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதால் தமிழக பாஜகவின் வழக்கறிஞர் அனுப்பியுள்ள நோட்டீஸில் குறிப்பிட்டபடி மன்னிப்பு கேட்க மாட்டேன். தமிழக பாஜகவை என்னைப் பெற்ற தாய், தந்தைபோல் என் குடும்பமாக நேசிப்பதால் கட்சியை எதிர்த்து வழக்கு நடத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே நோட்டீஸை திரும்பப் பெற வேண்டும்.
தமிழக பாஜக தேர்தல் தோல்விகள் நிர்வாக சீர்கேடுகள், நிதி முறைகேடுகள், தன்னிச்சையாக பாஜக கட்சிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் நீக்கப்படுவது குறித்து விசாரித்து தமிழக பாஜகவை சுத்தப்படுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் நிதின் நபின் உடனடியாக தலையிட்டு தேசிய தலைவர்கள் இடம்பெரும் வகையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து முழு விசாரணை நடத்த வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்னதற்கெல்லாம் தலையாட்டும் பொம்மையாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இருந்தார்.
தேர்தல் நெருங்க நெருங்க விஜய் அலை வேகமாக வீசத் துவங்கியது. அதனால் வேறு வழியின்றி வேட்புமனு தாக்கல் துவங்கும் முன்பு தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டேன். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையால் நான் மாநில செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து நான் எனது கடமையை சிறப்பாக செய்து வந்தேன்.
ஆண்டுக்கு குறைந்தது 200 அறிக்கைகளை வெளியிட்டு, திமுக ஆட்சிக்கு எதிராகவும், நமது கட்சியின் கொள்கைகள் மத்திய மோடி அரசின் சாதனைகள் குறித்தும், கட்சிக்கு எதிராக, பிரதமர் மோடிக்கு எதிராக பரப்பப்படும் அவதூறு பிரச்சாரங்களுக்கும் தெளிவான விளக்கங்களை அளித்து வந்தேன். இவை அனைத்தும் முன்னணி ஊடகங்களில் வெளிவந்தன. இதை அனைவரும் அறிவர்.
எனது இந்த பணிகளை ஒரு நாளும் பாராட்ட, ஊக்கப்படுத்த மனம் இல்லாத நயினார் நாகேந்திரன், தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என நான் அறிக்கை வெளியிட்டதும், ஒரு வார்த்தை கூட விளக்கம் கேட்காமல் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார். இதற்கு கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. சிறப்பாக செயல்படும் பிரசாத்தை ஏன் நீக்கினீர்கள் எனப் பலரும் கேட்கத் துவங்கினார். இதனால் வேறு வழியின்றி நான் மன்னிப்பு கேட்டதாக ஒரு அப்பட்டமான பொய்யைக் கூறி என்னை மீண்டும் மாநில செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் நியமித்தார். இதையும் பொருட்படுத்தாமல் கட்சிக்காக எனது பணியை தொடர்ந்தேன்.
கட்சித் தலைமையிடம் நான் சொன்னது போலவே தேர்தல் முடிவுகளில் தவெக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பெரும்பான்மை இல்லாவிட்டால் விஜய் முதல்வராக வேண்டும் என்பதே தமிழக மக்களின் தெளிவான தீர்ப்பு. இதை மதித்து தவெக ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். அப்போது தான் குதிரை பேரத்தை தவிர்க்க முடியும் என அறிக்கை வெளியிட்டேன். உடனே என்னை மாநில செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நயினார் நாகேந்திரன் நீக்கினார். அடுத்த சில நாட்களில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்குவாக அறிவித்தார்.
அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க வேண்டும் என தேர்தல் முடிவு வெளியான உடனேயே நான் அறிக்கை வெளியிட்டேன். அப்படி செய்திருந்தால் இன்று அதிமுக உடைந்திருக்காது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 9 ஆண்டுகள் கட்சியை தன் பிடிக்குள் வைத்திருந்த திரு. பழனிசாமியிடம் இருந்து இப்போது அதிமுக நழுவிக் கொண்டிருக்கிறது.
தலைவர் என்பவர் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரிடமும் கருத்துகள், ஆலோசனைகள் கேட்டு முடிவு எடுக்க வேண்டும். நிர்வாகிகள் சொல்வதில் உடன்பாடு இல்லை என்றாலும், அது சாத்தியமில்லை என்றாலும் சொல்வதைக் கேட்க வேண்டும். அதில் நியாயம் இருந்தால் அதுபற்றி சக நிர்வாகிகள், மேல்மட்ட தலைவர்களிடம் ஆலோசித்து அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்.
ஆனால், நயினார் நாகேந்திரன் எதுவும் செய்வதில்லை. ஏதேச்சதிகாரமாக தன்னிச்சையாக கட்சி நலனுக்கு எதிராகவே செயல்பட்டார். நிர்வாகிகள் எதைச் சென்னாலும் கேட்க மாட்டேன். நான் வைத்ததுதான் சட்டம் என்று செயல்பட்டதன் விளைவை, மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி செய்யும், 22 மாநிலங்களை ஆளும் பாஜக அனுபவிக்கிறது.
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் முயற்சிகள் படுதோல்வி அடைந்ததற்கு நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் தான் காரணம் என்பது கடைக்கோடி தொண்டனுக்கும் தெரியும். இதற்கு தார்மிக பொறுப்பேற்று இருவரும் பதவி விலக வேண்டும் என தொண்டர்கள் அனைவரும் விரும்புகின்றனர். அந்த விருப்பத்தைதான் நான் வெளிப்படுத்தினேன். இதைக்கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் என்னை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர்.
கட்சிக்காக உழைத்த மாநில செய்தித் தொடர்பாளராக இருந்த எனக்கு, கட்சித் தலைமையை விமர்சித்ததாகக் கூறி ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் சகோதரர் குமரகுரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி மீது, அமித் ஷா மீது, பாஜக மீது, இந்து மதத்தின் மீது அவதூறுகள் பரப்பப்பட்ட போதெல்லாம் அதற்காக யாருக்கும் நோட்டீஸ் அனுப்பாத, சட்ட நடவடிக்கைகள் எடுக்காத பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மாநில நிர்வாகி ஒருவருக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்புகிறது. நயினார் நாகேந்திரன் எந்த அளவுக்கு குழப்பத்தில் இருக்கிறார் என்பதைத்தான் இந்த செயல் காட்டுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலில் ஏன் தோல்வி அடைந்தோம். அதை எப்படிச் சரி செய்வது என்று ஆராயமல் கட்சி நலனுக்காக சில நபர்களின் தவறான செயல்களை சுட்டிக்காட்டும் நிர்வாகிகள், தொண்டர்களை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் நீக்கி வருகிறார். இதிலும் எடப்பாடி பழனிசாமியைதான் அவர் பின்பற்றுகிறார்” இவ்வாறு ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியுள்ளார்.