

சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: தமிழக மின்வாரியத்துக்கு மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) கொள்முதல் செய்ததில் ரூ.397 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து, அரசு நிறுவனமான மின்சார வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
ஊழலைத் தடுப்பதில் புதிய அரசுக்கு உண்மையான அக்கறை இருந்தால், சிபிஐ விசாரணையை முடக்கும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை உடனே திரும்பப் பெற வேண்டும்.
அதேபோல, கே.என்.நேரு உள்ளிட்டோர் மீதான பல்வேறு ஊழல் புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை இன்னும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் நிலுவையில் வைத்துள்ளது. அவற்றின் மீது தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.