

அன்புமணி ராமதாஸ்
சென்னை: சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது சாதிகள் பட்டியலில் இருந்து சாதியை தேர்ந்தெடுத்து நிரப்பும் முறையை மத்திய அரசு கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமரிடம் பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியின் போது, சாதி என்ற கேள்விக்கான பதிலை குறிப்பிடும் பகுதியை காலியாக விட்டு விடுவதென்றும், அந்த இடத்தில் மக்கள் குறிப்பிடும் சாதியின் பெயரை அப்படியே பதிவு செய்வதென்றும் இந்தியத் தலைமைப் பதிவாளர் முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த முறையில் மக்களின் சாதி விவரம் சேகரிக்கப்பட்டால், நிறைய சிக்கல்கள் ஏற்படும். நாடு முழுவதும் ஒவ்வொரு சாதியிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. அந்த உட்பிரிவுகளின் பெயர்கள் அரசால் பயன்படுத்தப்படும் சாதிகளின் பட்டியலில் இடம் பெற்றிருக்காது.
இத்தகைய சூழலில், மக்கள் தெரிவிக்கும் சாதியின் பெயரை அப்படியே நிரப்பி, அது உட்பிரிவின் பெயராக இருந்தால், அது அரசின் பட்டியலில் உள்ள சாதிகளை விட பல மடங்கு சாதிகள் இருப்பதாக கணக்கில் காட்டப்படும். இது சரிசெய்ய முடியாத குழப்பத்தை உண்டாக்கி, இந்தக் கணக்கெடுப்பின் தரவுகளை பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்கிவிடும்.
இந்த சிக்கலுக்கான தீர்வு மிகவும் எளிதானது. இந்தியாவில் என்னென்ன சாதிகள் உள்ளன என்பது குறித்த பட்டியல் மத்திய அரசிடமும், மாநில அரசுகளிடமும் உள்ளன.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தேசிய அளவில் மத்திய அரசால் நடத்தப்படும் நிலையில், அந்தப் பட்டியலை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான செயலியின் மென்பொருளில் இணைத்து, அந்தப் பட்டியலில் இருந்து மக்கள் தங்கள் சாதியை தேர்வு செய்யும் முறையை பின்பற்றுவது தான் சரியான தீர்வாகும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.