

சென்னை: பிரான்ஸ், ஆஸ்திரேலியாவை பின்பற்றி இந்தியாவிலும் 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
குழந்தைகளின் உடல் நலன், மனநலம் ஆகியவை சார்ந்து பார்க்கும்போது இது மிகவும் அவசியமான நடவடிக்கையாகும். குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த முதன்முதலில் தடை விதித்த நாடு ஆஸ்திரேலியா.
கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்நாட்டில் தடை நடைமுறைக்கு வந்த பிறகு கனடா, பிரேசில், இந்தோனேஷியா ஆகிய நாடுகளும் குழந்தைகளின் சமூக ஊடக பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளன.
இங்கிலாந்து, ஸ்பெயின், கிரீஸ், ஜெர்மனி, டென்மார்க் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் இதே போன்ற தடை குறித்து ஆராய்ந்து வருகின்றன. இந்தியாவில் கர்நாடகம், ஆந்திர அரசுகள் குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளன.
சமூக ஊடகங்களுக்கு குழந்தைகள் அடிமையான பிறகு விளையாடும் வழக்கம் குறைந்துவிட்டது. கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட உடல்திறன் சார்ந்த விளையாட்டுகளை குழந்தைகள் மறந்துவிட்டனர்.
இதனால் உடல் பருமன், வைட்டமின்-டி குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். இந்த பாதிப்புகளை தடுப்பதற்கு சமூக ஊடகங்களுக்கு தடை விதிப்பதுதான் தீர்வாகும்.
குழந்தைகளின் உடல் நலன், மன நலம், கல்வி ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்களை இதிலிருந்து மீட்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களுக்கு குழந்தைகள் அதிகம் அடிமையாகும் நாடுகளில் ஒன்றான இந்தியாவும் தடையை முன்னெடுக்க வேண்டும்.
எனவே 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்ததடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.