“பெண்களுக்கு எதிரான திமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்” - ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி பேச்சு

“பெண்களுக்கு எதிரான திமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்” - ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி பேச்சு
Updated on
2 min read

கடலூர்: “பெண்களை நாம் கடவுளாகவும், குலசாமியாகவும் கொண்டு வாழ்ந்து வருகின்றோம். தமிழகத்தில்தான் அதிக பெண் தெய்வங்கள் உள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியை தூக்கி எறியுங்கள்” என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்கள் புழக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறியதாக திமுக அரசை கண்டித்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் இணைந்து கடலூரில் இன்று ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில், “தமிழ்நாடு முழுவதும் திமுக அரசை விரட்டி அடிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.

திமுக ஆட்சி செய்து தமிழ்நாட்டை நாசப்படுத்தியது போதும். பெண்களுக்கும் பெற்றோர்களுக்கும், மக்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்... தமிழ்நாட்டை மன்னர்கள், ஆங்கிலேயர்கள், முதல்வர்கள் பலர் ஆண்டு உள்ளனர். ஆனால் தற்போதைய முதல்வர் ஆண்டு வரும் நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக உள்ளது. தகுதி இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது.

ஒரு நாளைக்கு ஐந்து கொலைகள் என ஐந்து ஆண்டுகளில் 7,832 கொலைகள் நடந்துள்ளன. இதில் 1973 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 361 குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 38 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு உள்ளனர். இந்த கொடூரத்தைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

ஆட்சி செய்வதற்கு தகுதியற்றவர்களாக இந்த ஆட்சியாளர்கள் உள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களாக 44 ஆயிரம் குற்றங்கள் நடைபெற்றுள்ளது. இதில் 2021 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். 62,000 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராகவும், இதில் 27,000 குற்றங்கள் போக்ஸோ வழக்கு உள்ளது. இதனை எல்லாம் பார்க்கும்போது வெட்கக்கேடான ஆட்சி என தெரிகிறது. தமிழகத்தில் 22 லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. எங்கே பார்த்தாலும் கொள்ளையடித்து இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டை நாசப்படுத்தியுள்ளனர். முதல்வர் என்ற பெயரில் நான்கு வியாபாரிகள் உள்ளனர். கலெஷன், கரெப்ஷன்,கமிஷன்... இதுதான் இந்த ஆட்சியில் நிலையாகும். இது தவிர வேற எதுவும் தெரியாது.

தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து ஜெயித்து விடலாம் என கனவு காண்கிறார்கள். கடலூர் மாவட்டம் என் மண். இங்குள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதியில் திமுக டெபாசிட் இழந்து தோற்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அதனை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். அவர்களும் இதனை பார்க்கத்தான் போகிறார்கள்.

மோசமான, மோசடியான ஆட்சியாக உள்ளது. கடந்த முறை நீங்கள் திமுகவுக்கு வாய்ப்பு கொடுத்ததால் எல்லா துறைகளும் தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக சட்டம் - ஒழுங்கு மிகப் பெரிய தோல்வியை அடைந்துள்ளது.

வீரமங்கை அஞ்சலை அம்மாள் வாழ்ந்த மண்ணில் நாம் வாழ்ந்து வருகின்றோம். ஆகையால் இனி தயவு செய்து திமுக ஆட்சியை வரவிடக் கூடாது. தாய்மார்களின் காலை பிடித்து கேட்கிறேன். முதல்வராக ஸ்டாலின் மீண்டும் வர மாட்டார். இருந்தபோதிலும் மீண்டும் முதல்வராக ஸ்டாலின் வந்தால் கஞ்சாவை விட அதிக போதை தரும் போதை பவுடர் விற்பனை அதிகரிக்கும். ஆகையால் கையாளாகாத ஆட்சியை விரட்டி அடித்து மீண்டும் தமிழ்நாட்டின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை அமர வைக்க வேண்டும். இதன் மூலம் புதிய தமிழகத்தை அமைப்போம்.

கடந்த 74 ஆண்டுகளில் தமிழகத்தில் 4.56 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளனர் . ஆனால், இந்த திமுக ஆட்சி பதவியேற்று ஐந்தாண்டுகளில் 4.96 லட்சம் கோடி கடன் பெற்று உள்ளனர். இந்த கடனை பெற்று தமிழகத்திற்கு ஏதேனும் திட்டங்கள் செய்தார்களா? ஆகையால் இந்த ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்.

மேலும், திமுக 505 தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், 66 தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமே முழுமையாக செயல்படுத்தி உள்ளனர். இதன் மூலம் 13 விழுக்காடு மட்டுமே தேர்தல் அறிக்கையை நிறைவேற்றி உள்ளனர்.

பெண்களை நாம் கடவுளாகவும். குலசாமியாகவும் கொண்டு வாழ்ந்து வருகின்றோம். தமிழகத்தில் தான் அதிக பெண் தெய்வங்கள் உள்ளனர்.பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியை தூக்கி எறியுங்கள். கோபம் கொந்தளிப்பு அதிக அளவில் இருக்க வேண்டும். எங்கள் கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். கோபத்துடன் இங்கிருந்து செல்கின்றேன். எனது கோபம் அடங்க வேண்டும் என்றால் மே 4 ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்ந்தெடுத்து உள்ளார் என்பது தெரிந்த பிறகுதான் கோபம் தனியும்” என்று அவர் பேசினார்.

“பெண்களுக்கு எதிரான திமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்” - ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி பேச்சு
தத்துக் குழந்தை வயது எதுவாகினும் தாய்க்கு மகப்பேறு விடுப்பு உண்டு: உச்ச நீதிமன்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in