

கடலூர்: தமிழக விவசாயிகள், தேர்தலில் திமுகவை தூக்கி எறிய போகிறார்கள் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
கடலூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: திமுகவுக்கு, உண்மையிலேயே விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் ஏன் உரிய ஊக்கத்தொகை கொடுக்கவில்லை.
ஒரு குவிண்டால் நெல்லை உற்பத்தி செய்வதற்கு ரூ.2,450 ஆகிறது. தமிழக அரசுரூ.2,500 மட்டுமே தருகிறது ஒரு குவிண்டால் நெல்லுக்கு ஒடிசா அரசு ஊக்கத்தொகையாக 800 ரூபாய் கொடுக்கிறது. தெலங்கானா அரசு 500 ரூபாய் கொடுக்கிறது.
திமுகவை விவசாயிகள் மன்னிக்கப் போவது கிடையாது. தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் முடிவு செய்து விட்டார்கள் திமுகவை தூக்கி எறிய போகிறார்கள்.
ஸ்டாலின் அடுக்கி வரும் சாதனைகள் எதுவும் மக்களிடம் எடுபடவில்லை. அதனால் மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்து பேச தொடங்கி இருக்கிறார். இது சட்டப்பேரவைத் தேர்தல். இங்கு திமுக, அதிமுக கூட்டணி இடையேதான் போட்டி. இதை தெரிந்து அவர் பாஜகவைப் பற்றி பேசி திசை திருப்புகிறார். இது தவிர பழனிசாமி மீது தனி நபர் விமர்சனத்தை வைக்கிறார்.
கடலூர் மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை. விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் விவசாயிகளுக்கு நன்மை செய்வதை விடுத்துவிட்டு விவசாய நிலங்களை பிடுங்கி நிறுவனங்களுக்கு கொடுக்கக்கூடிய புரோக்கராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
போராட்டத்தில் ஈடுபடும் 200 பேரை அப்புறப்படுத்த ஆயிரம் போலீசாரை களத்தில் இறக்குகிறார்கள். நிலங்களை எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டு சாப்பாட்டிற்கு என்ன செய்யப் போகிறார்கள்?
வள்ளலார் சர்வதேச மையம் வேண்டும், அதில் மாற்று கருத்து இல்லை ஆனால் தற்போது அமைக்கத் திட்டமிட்டு இருக்கும் இடத்தில் தேவை கிடையாது.
எப்போது பார்த்தாலும் ‘பாஜக பாஜக’ என்று மத்திய அரசை விமர்சனம் செய்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்.?
இபிஎஸ் முதலமைச்சர் ஆனவுடன் மத்திய அரசிடம் தேவையான நிதிகளை பெற்று தமிழ்நாட்டுக்கு தேவையான நன்மைகளை செய்து கொடுப்பார்.
இந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு 5 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறது. இதில் மூலதனத்திற்கு எவ்வளவு செலவு செய்துள்ளார்கள்?
இதை திமுக விளக்க வேண்டும். ஒரு வார்த்தையை கூட போதை ஒழிப்பை பற்றி இந்த தேர்தலில் பேசவில்லை. இவர்கள் கட்சியின் நிறுவனர் அண்ணா மது ஒழிப்பை ஆதரித்தார். இந்தியாவிலேயே அதிகமான கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள். அதிகமான விதவைகள் வாழும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.
திமுகவின் கைக்கூலிகள் ஆன துரோகிகள்தான், என்னுடைய தந்தை ராமதாசை இந்த நிலைக்கு வைத்துள்ளனர். அவரது உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு அவர்களே காரணம்.
என் தந்தை 100 வயது நன்றாக இருக்க வேண்டும். ஒரு மகனாக அவருக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். அவருக்கு ‘வெர்டிகோ’ பிரச்சினை இருக்கிறது.
நீண்ட நேரம் அமர்ந்து விட்டு எழுந்து நின்றால் தலை சுற்றல் வரும். தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். அவருக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர்களிடம் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறேன் என்று தெரிவித்தார்.