

அன்புமணி
சென்னை: மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு இல்லாததால், விவசாயிகளுக்கு குறுவைத் தொகுப்புடன், ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் மானியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைவதற்கான வாய்ப்புகள் தென்படவில்லை. இதனால், காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாது என்பது உறுதியாகிவிட்டது.
கடந்த ஆண்டு குறுவைப் பருவத்தின் போதுதான், முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.13 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு உரிய காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாவிட்டால், குறுவை நெல்சாகுபடி பரப்பு 3 லட்சம் ஏக்கருக்கும் கீழாக குறைந்துவிடும். இதனால், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பும், தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும் ஏற்படும். இந்த பாதிப்புகளை ஓரளவுக்காவது கட்டுப்படுத்த வேண்டும் என்றால், நிலத்தடி நீரைப் பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்வதும், அதற்காக விவசாயிகளுக்கு உதவ வேண்டியதும் அரசின் கடமை.
எனவே, காவிரிபாசன மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு விதைகள், உரங்கள், நுண்ணூட்டச் சத்துகள் உள்ளிட்டவற்றை மானியத்தில் வழங்கும் குறுவைத் தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு உடனேஅறிவித்து உச்ச வரம்பின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும். மேலும், 24 மணி நேரமும் தடையற்ற மும்முனை மின்சாரம்வழங்கவும், இடுபொருள் மானியமாக ஏக்கருக்கு ரூ.5,000 வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.