

சென்னை: பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றால், மக்கள் பனையூருக்கு செல்ல வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இடம்பெற்றுள்ள பாமக சார்பில் பெரம்பூர் தொகுதியில் வேட்பாளர் திலகபாமா, அதிமுக சார்பில் ராயபுரம் தொகுதியில் வேட்பாளர் டி.ஜெயக்குமார், துறைமுகம் தொகுதியில் வேட்பாளர் மனோ, ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், எழும்பூர் தொகுதியில் வேட்பாளர் ஆர்.அபிஷேக் மற்றும் திருவிக நகர் தொகுதியில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அவர்களை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி பிரச்சாரம் செய்தார். அப்போது, அன்புமணி பேசியதாவது: விஜயகாந்த் கட்சி தொடங்கியதே திமுகவுக்கு எதிராக தான். ஆனால், பிரேமலதா விஜயகாந்த், அவர்களுடன் சேர்ந்துள்ளார். விஜயகாந்தின் ஆன்மா அவர்களை மன்னிக்காது. திமுக கூட்டணியில் திருமாவளவன் 5 ஆண்டுகளாக வாய் பேச முடியாமல் அசிங்கப்பட்டுள்ளார்.
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகளும், நீண்ட காலமாக உள்ள விசிகவுக்கு குறைந்த தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 5 ஆண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட தொடங்கவில்லை. அமைச்சர்கள் வியாபாரிகளாக உள்ளனர்.
முதல் வியாபாரி எ.வ.வேலு. இரண்டாவது வியாபாரி சேகர்பாபு, மூன்றாவது வியாபாரி செய்தில் பாலாஜி, நான்காவது வியாபாரி கே.என்.நேரு. பெரம்பூர் தொகுதிக்கு தவெக தலைவர் விஜய் வேனில் வருவார். வேனில் செல்வார்.
திலகபாமா உங்கள் வீட்டு வாசலில் இருப்பார். அதே போன்று விஜய் வெற்றி பெற்றால், நீங்கள் பனையூர் வாசலுக்குச் செல்ல வேண்டும். திலகபாமா உங்கள் வீட்டு வாசலில் உங்களுடன் நிற்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, அம்பத்தூர், மதுரவாயல், மாதவரம், திருவள்ளூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி ஆகிய தொகுதிகளிலும் அன்புமணி பிரச்சாரம் செய்தார்.