

திருச்சி: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் தொடக்கப் பள்ளிகளில் இடைநிற்றல் பூஜ்யமாக உள்ளது.
இந்திய அளவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் 14 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில் 7.7 சதவீதமாக உள்ளது. அதையும் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய தகவல் தொழில்நுட்ப உலகில், எந்த அமைச்சரும் தவறான, பொய்யான தகவல்களை போகிறபோக்கில் சொல்லிவிட்டு போய்விட முடியாது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. இது தொடர்பாக முதல்வர் என்னிடம் 3 முறை பேசினார். 2014-15-ம் ஆண்டு நபார்டு நிதியில் அந்தப் பள்ளியின் சுவர் கட்டப்பட்டது.
இந்த விவகாரத்தில் அலட்சியமாக யார் செயல்பட்டு இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விபத்தில் உயிரிழந்த மாணவனின் குடும்பத்துக்கு பக்கபலமாக இருப்போம். அவரது சகோதரரின் கல்விக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கத் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.