

சென்னை: அமமுக சார்பில் போட்டியிடும் 11 வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்வெளியிட்டார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 27 தொகுதிகள், பாமக 18 தொகுதிகள், அமமுக 11 தொகுதிகள், தமாகா 5 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (சனிக்கிழமை) காலை வெளியிட்டுள்ளார்.
இதில், G. செந்தமிழன், C.சண்முகவேல் ஆகிய இரண்டு முன்னாள் அமைச்சர்களுக்கு டிடிவி தினகரன் வாய்ப்பளித்துள்ளார்.
11 வேட்பாளர்கள் விவரம்:
திருவையாறு: V. வேலு கார்த்திகேயன்
காரைக்குடி: தேர்போகி V. பாண்டி
நாங்குநேரி: R. இசக்கிமுத்து
ஒட்டப்பிடாரம் (தனி) : இரா. சுந்தர் ராஜன்
சைதாப்பேட்டை: G. செந்தமிழன்
திருப்பத்தூர்: ஞானசேகரன்
மன்னார்குடி: எஸ்.காமராஜ்
பூவிருந்தவல்லி: ஏழுமலை
பெரியகுளம் (தனி) : K. கதிர்காமு
மடத்துக்குளம்: C.சண்முகவேல்
திருச்சி மேற்கு: M.ராஜசேகரன்
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும். தமிழகத்தில் இருண்ட காலம் நடந்து கொண்டிருக்கிறது. அதை விரட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைய வேண்டும்.
நாங்கள் குக்கர் சின்னத்தில் தான் போட்டியிடவிருக்கிறோம். தமிழக மக்கள் திமுகவுக்கு எதிராக அமைதிப் புரட்சி தான் செய்வார்கள். சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. திமுக பாஜகவை காட்டி பயமுறுத்துகிறது. ஒரு குடும்பத்தின் பிடியில் ஆட்சி நடக்கிறது. இதை மாற்ற அம்மாவின் ஆட்சி வரவேண்டும். முதல்வருக்கு பயம் இருக்கிறது. அதனால் தான் அனைவரையும் கூட்டணியில் சேர்க்கிறார். அவர்கள் தோற்றகப்போகும் கூட்டணி” இவ்வாறு அவர் கூறினார்.