

அமித் ஷா
புதுச்சேரி: புதுச்சேரி காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் உயரிய வண்ண விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையின் நீண்டகால சிறப்பான சேவை, ஒழுக்கம் மற்றும் மக்கள் பாதுகாப்பில் இத்துறை ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த உயரிய விருது புதுச்சேரி காவல் துறைக்கு வழங்கப்படுகிறது.
இதற்கான விழா புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள காவல் மைதானத்தில் வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது. இந்த விருதை வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 8-ம் தேதி (சனிக்கிழமை) புதுச்சேரி வருகிறார். அன்றைய தினம் மாலை சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி விமான நிலையம் வருகிறார். துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அவரை வரவேற்கின்றனர்.
புதுவையில் இரவு தங்கும் அவர் மறுநாள் 9-ம் தேதி கோரிமேடு மைதானத்தில் நடை பெறும் விழாவில் பங்கேற்கிறார்.புதுச்சேரி காவல்துறைக்கு வண்ண விருதை வழங்கி உரையாற்றிய பின்னர் அங்கிருந்து புறப்பட்டு புதுச்சேரி விமான நிலையம் வந்து, ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்குச் சென்று அங்கு ரமண மகரிஷி ஆசிரமத்தை பார்வையிடுகிறார்.
அதன்பின் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை வந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அமைச்சர் அமித் ஷா வருகையையொட்டி புதுச்சேரி, திருவண்ணாமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. புதுச்சேரி நிகழ்வானது ஏற்கெனவே கடந்த ஜூலை 25-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், அமித் ஷாவின் தமிழகம், புதுச்சேரி வருகை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.