

கோப்புப் படம்
மத்திய முகமைகள் உதவியுடன் அமித் ஷா தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கியுள்ளார் என்று சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செ.ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. அகில இந்திய மாணவர் காங்கிரஸ் தலைவர் வருண் சவுத்ரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செ.ராஜேஷ் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் பேசிய வருண் சவுத்ரி, “2000-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் பிறந்த இளைஞர்களை ஒருங்கிணைத்து ஒரு மாநில அளவிலான மாநாட்டை நடத்த வேண்டும். அதில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை நான் அழைத்து வருகிறேன்” என்றார்.
நிகழ்ச்சியின் முடிவில், ராஜேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக -காங்கிரஸ் கூட்டணி கடந்த 2002-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. இந்தக் கூட்டணியில் எந்த தொய்வும் இல்லை. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை மத்திய அமைச்சர் அமித் ஷா ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கி வருகிறார்.
மத்திய முகமைகளான ஈடி, சிபிஐ, ஐடி போன்ற துறைகளை வைத்து இக்கூட்டணியை உருவாக்கியுள்ளார். அதற்கு உரிய பதிலை வரும் தேர்தலில் கொடுப்பார்கள்.
கூட்டணி பேச்சு நல்லபடியாக முடியும். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அது குறித்து எங்கள் தலைமை பேசி உரிய முடிவை எடுக்கும் என்றார்.