

ஆதிதிராவிடர் (எஸ்சி) மற்றும் பழங்குடியின (எஸ்டி) விவசாயிகள், அரசின் திட்டப் பலன்களை தடையின்றி அடையவும், நீராதாரங்களை உருவாக்கி உற்பத்தியை அதிகரிக்கவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவி திட்டம் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தில், மேற்கண்ட விவசாய பயனாளிகள், உயர் மதிப்பு வேளாண் திட்டங்களில் செலுத்த வேண்டிய பங்குத் தொகையில் கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படும்.
நிழல் வலைக்குடில்கள், சூரிய கூடார உலர்த்திகள், மதிப்புகூட்டும் இயந்திரங்கள், ஒருங்கிணைந்த பண்ணையம், பசுமை குடில்கள், பண்ணை இயந்திரங்கள் போன்றவற்றுக்கு 70 சதவீத மானியமும் சூரிய சக்தி பம்ப்செட்கள் அமைக்க 80 சதவீத மானியமும் வழங்கப்படும்.
நீர்ப்பாசன வசதியில்லாத 300 ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளின் புன்செய் நிலங்களில் நீர்ப்பாசன ஆதாரமாக ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் 100 சதவீத மானியத்தில் மின் மோட்டார் அல்லது சூரிய சக்தி பம்ப்செட்களுடன் அமைக்கப்படும். இத்திட்டத்துக்காக நடப்பாண்டில் ரூ.56.72 கோடி ஒதுக்கப்படும்.
கால்நடை, மீன், தேனீ வளர்ப்புக்கு ரூ.3,000 கோடி குறுகிய கால கடன்
கால்நடை, மீன், தேனீ வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்கான உழவர்களின் குறுகிய கால தேவைக்கு ரூ.3,000 கோடிக்கு மூலதனக் கடன் வழங்கப்படும்.விளைபொருள் வீணாவதை தடுக்க ரூ.10 கோடியில், 43,500 விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வழங்கப்படும்.
ரூ.2.80 கோடியில் தனிநபர் விவசாய நிலங்களில் 100 கதிரடிக்கும் களங்கள் அமைக்கப்படும். ரூ.23.06 கோடியில் 1,000 விவசாயிகளுக்கு சூரிய சக்தி பம்ப்செட் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். ரூ.23 கோடியில் தமிழ்நாடு விவசாயிகள் வருமான மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்படும்.
ரூ.20 கோடியில் உழவர் சந்தைகள் சீரமைக்கப்படும். 1,000 எருமை கிடேரிக் கன்றுகளுக்கும், சினையாக உள்ள 1,000 எருமைகளுக்கும் ஊட்டச்சத்து ஆதரவு வழங்க ரூ.2.04 கோடி ஒதுக்கப்படும்.
மண்வளத்தை பாதுகாக்க சிறப்பு இயக்கம்
மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், களர், உவர் நிலங்களை சீர்படுத்துதல், ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்தல், இயற்கை, உயிர்ம வேளாண் முறைகளை ஊக்குவித்தல் ஆகிய செயல்பாடுகளை மேற்கொண்டு வளமான தமிழ் மண்ணை வருங்காலம் காண ஐந்தாண்டு திட்டமாக ‘தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம்’ ரூ.600 கோடியில் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும்.
இதன்கீழ் 22 ஆயிரம் ஏக்கருக்கு தேவையான பசுந்தாள் உர விதைகள் மானிய விலையில் வழங்கப்படும். வளர்ந்த பசுந்தழைகளை நிலத்திலேயே மடக்கி உழுவதற்கு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் உழவு மானியம் வழங்கப்படும். இதற்கு ரூ.63.50 கோடி ஒதுக்கீடு.
நிரந்தர மண்புழு உரக்கூடங்கள் ரூ.10 கோடியில் அமைக்கப்படும். வளம் குறைந்த நிலங்களை மீட்டெடுக்க, மண் சீர்திருத்தம் குறித்து 2 ஆயிரம் ஏக்கரில் ரூ.2 கோடியில் செயல் விளக்கம் மேற்கொள்ளப்படும்.
விதைப் பண்ணைகள் அமைத்து 7,730 டன் சான்று நெல் விதை உற்பத்தி செய்து, தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமைக்கு வழங்கும் விவசாயிகளுக்கு, நெல் விதை உற்பத்தி மானியமும், 14,570 டன் சான்று அளிக்கப்பட்ட விதைகளை மானியத்தில் விநியோகிக்க நெல் விதை விநியோக மானியமும் வழங்க ரூ.34.72 கோடி ஒதுக்கப்படும்.
தளிர்க் கீரை வளர்ப்பு
ப்ரக்கோலி, முட்டைக்கோஸ், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, கொண்டைக்கடலை, ஆளி விதைகள், வெங்காயம், பச்சைப்பயறு, கொள்ளு, எள், கோதுமை, கீரை வகைகள் ஆகியவற்றின் இளம் நாற்றுகள் ‘தளிர்க் கீரைகள்’ எனப்படுகின்றன.
முதிர்ந்த செடியைவிட இவற்றில் 40 மடங்கு வரை அதிக ஊட்டச்சத்து உள்ளது. எனவே, விதைகள், நீர்த் தெளிப்பு கருவி, வழிமுறை கையேடு உள்ளிட்டவை அடங்கிய 20 ஆயிரம் தளிர்க் கீரை தொகுப்புகளை சென்னை, கோவை, திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் விநியோகிக்கும் வகையில் ‘தளிர்க் கீரைகள் திட்டம்’ ரூ.1.20 கோடியில் செயல்படுத்தப்படும்.
தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்ய ரூ.11.73 கோடியில் நிரந்தர பந்தல் அமைக்கும் திட்டம், ரூ.6.25 கோடியில் வாழைக்கு முட்டுக் கொடுத்தல் திட்டம், ரூ.16 கோடியில் தென்னைக்கான சிறப்பு திட்டம் செயல்டுத்தப்படும்.