

ரூ.2 கோடியில் உழவர் ‘ஏஐ’
விவசாயிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தி மண் வளம், பயிர் சாகுபடி குறித்த தகவல்களை உடனுக்குடன் வழங்க ‘உழவர் செயற்கை நுண்ணறிவு (AI) திட்டம்’ ரூ.2 கோடியில் செயல்படுத்தப்படும்.
இதன்படி, ஏஐ மற்றும் இயந்திரவழி கற்றலுக்கு உரிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, வானிலை முன்னறிவிப்பு, மண் நலம், மண் வளம், பூச்சி, நோய் மேலாண்மை, பருவநிலைக்கு ஏற்ற பயிர் என, விதைப்பு முதல் அறுவடை வரையிலான அனைத்து தொழில்நுட்ப ஆலோசனைகளும், சேவைகளும் வழங்கப்படும்.
மேலும், சந்தை நிலவரம், குரல் வழி வேளாண் சேவைகள், அரசு திட்டங்கள் உள்ளிட்ட அறிவுசார் வேளாண் சேவைகளையும் விவசாயிகள் தங்கள் கைபேசி வாயிலாக எளிதாக பெற முடியும்.
குறுதானிய இயக்கம்
தமிழகத்தில் வறட்சியை தாங்கும், குறைந்த நீர்த்தேவை கொண்ட, அதிக ஊட்டச்சத்து, நார்ச்சத்துடைய குறுதானியங்களான சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு போன்றவை சராசரியாக 61,750 ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது.
இவற்றின் சாகுபடி பரப்பை இருமடங்காக அதிகரிக்க, தமிழகத்தில் 29 மாவட்டங்களில் ‘தமிழ்நாடு குறுதானிய இயக்கம்’ ரூ.7.61 கோடியில் செயல்படுத்தப்படும்.
நீண்ட இழை பருத்தி சாகுபடி, ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவிக்க ‘பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்’ ஐந்தாண்டு திட்டமாக ரூ.27.21 கோடியில், 73,360 ஏக்கர் பரப்பில் செயல்படுத்தப்படும்.
இதனால் 40 ஆயிரம் பருத்தி விவசாயிகள் பயன்பெறுவர். அதிகரித்து வரும் மக்காச்சோள தேவையை நிறைவு செய்து, விவசாயிகள் வருவாய் ஈட்ட, ரூ.36 கோடியில் ‘மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டம்’ 3.47 லட்சம் ஏக்கர் பரப்பில், 1.39 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும்.
ரூ.785 கோடியில் ‘துளி துளி தண்ணீர்’
நுண்ணீர் பாசனத் திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்படுகிறது.
நடப்பு ஆண்டில் 2.23 லட்சம் ஏக்கரில் 95 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.758 கோடியில் ‘நீர் மேலாண்மைக்கான துளித் துளித் தண்ணீர் திட்டம்’ செயல்படுத்தப்படும்.