

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் தமிழக மக்கள் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை நேற்று தொடங்கியுள்ளனர்.
மஞ்சள், வெள்ளை, பிங்க் ஆகிய மூவண்ணங்கள் கொண்ட கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்தனர். கொடியின் நடுவே இரண்டு சிறுத்தைகள் இடம்பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் மற்றும் மாநில தலைவராக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஜெ.ஆபித், மாநில செயலாளராக திண்டுக்கல்லைச் சேர்ந்த ராம்குமார், மாநில பொருளாளராக முகமது ஷாஉள்ளிட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
கட்சியின் கொள்கைகள் குறித்து ஜெ.ஆபித் கூறுகையில், “மனித நேயத்துடன் கூடிய மதசார்பற்ற மக்கள் பணி, சாதி சமயமற்ற சமூக நீதி, இயற்கை வள பாதுகாப்பு, பெண்ணுரிமை மற்றும் சம வாய்ப்பு, தமிழர் நலம் மற்றும் தமிழ் மொழி வளர்ச்சி ஆகியவற்றை முக்கிய கொள்கைகளாக கொண்டு கட்சி தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், நடிகர் அஜித்குமார் இந்தக் கட்சியில் பொதுச்செயலாளர் பதவியை ஏற்று வழிநடத்த வேண்டும் என அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.