“தமிழகத்தில் 210 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும்” - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

“தமிழகத்தில் 210 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும்” - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
Updated on
1 min read

கோவை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 210 தொகுதிகளில் வெல்வோம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோவை தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி இன்று தனது தொகுதிக்கு உட்பட்ட சுகுணாபுரம் அரசுப் பள்ளியில் குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும். கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகள் மற்றும் அவிநாசி தொகுதியையும் சேர்த்து 11 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாகி உள்ளது. நீலகிரி, திருப்பூர், கோவையில் அனைத்து தொகுதிகளிலும் வெல்வோம்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமையும். மக்கள் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆர்வத்துடன் வாக்களிக்கின்றனர்.

கோவையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் பணிகள் திருப்தியாக இல்லை. கவுண்டம்பாளையத்தில் இன்று காலையில் கூட டோக்கன் கொடுத்துள்ளனர். தெற்குத் தொகுதியில் அம்மன் அர்ச்சுனன் கடுமையாக பாதித்துள்ளார். அவருடன் கலந்து பேசி போராட்டம் குறித்து முடிவெடுப்போம்.

தேர்தல் ஆணையம், போலீஸார் வேகமாக வேலை செய்ய வேண்டும். கோவை அமைதியான மாவட்டம், ஆனால், இன்று வேறு மாதிரியான சூழ்நிலைக்கு கொண்டு செல்லப் பார்க்கின்றனர். இதனை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். நாங்களும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

“தமிழகத்தில் 210 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும்” - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
“தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம்” - வாக்களித்த பின் சீமான் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in